பெயர் குழப்பத்தால் வேறு கைதி விடுதலை - சிக்கலில் சிறை அதிகாரிகள்!
சேலம்: சேலம் மத்திய சிறையில் உள்ள கைதிக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால் அதே பெயரில் உள்ள வேறு கைதியை சிறை அதிகாரிகள் ஜாமீனில் விடுதலை செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் அருகே கடந்த ஏப்ரல் 24 ம் தேதி ராசாத்தி என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் எஸ். பாப்பாராபட்டி எம்ஜிஆர் நகரை சேர்ந்த பழனியப்பன் மகன் ராஜா (35) கைது செய்யப்பட்டார்.
அதே ஊரைச் சேர்ந்த பாலன் என்பவரது மகன் ராஜாவும் (26) இதே வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பழனியப்பன் மகன் ராஜாவுக்கு ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதிகள் மறு உத்தரவு வரும் வரை தினமும் காலையில் வெண்ணந்தூர் காவல் நிலையத்தில் ராஜா கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை ஜாமீன் வழங்கினர்.
ஜாமீன் உத்தரவு ராசிபுரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. உத்தரவு சேலம் மத்திய சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஜாமீனில் வெளிவரும் மகனை அழைத்து செல்ல பழனியப்பன் குடும்பத்தினரும் வழக்கறிஞரும் சிறைக்கு வெளியில் காத்திருந்தனர். அப்போது, பழனியப்பன் மகன் ராஜா வருவதற்குப் பதிலாக பாலன் மகன் ராஜா வெளியே வந்தார்.
இதை பார்த்த பழனியப்பன் குடும்பத்தினரும் வழக்கறிஞரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து சிறை அதிகாரிகளிடம் அவர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் தாங்கள் நீதிமன்ற உத்தரவுப்படியே நடந்துள்ளாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். பெயர் குழப்பம் காரணமாக நடந்த இச்சம்பவம் சிறைத்துறை அதிகாரிகளை தடுமாற வைத்துள்ளது. பாலன் மகன் ராஜா ஜாமீனுக்கே விண்ணப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
--












Click it and Unblock the Notifications