காங். விருந்தில் பாஜக எம்பி; பாஜக விருந்தில் காங். எம்பி!
டெல்லி: டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று அளித்த விருந்து நிகழ்ச்சியில் பாஜக எம்.பி கலந்து கொண்டார். அதேபோல தேசிய ஜனநாயகக் கூட்டணி அளித்த விருந்தில், காங்கிரஸ் எம்.பி கலந்து கொண்டு சலசலப்பை ஏற்படுத்தினார்.
தத்தமது ஆதரவு எம்.பிக்களை கெளரவிப்பதற்காகவும், ஆதரவாளர்களின் தலைகளை எண்ணும் வகையிலும், காங்கிரஸ் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தனித் தனியாக விருந்து நிகழ்ச்சிகளுக்கு நேற்று ஏற்பாடு செய்திருந்தனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடத்தப்பட்ட விருந்தில், காங்கிரஸ் அதிருப்தி எம்.பியும், முன்னாள் ஹரியானா முதல்வர் பஜன்லாலின் மகனுமான குல்தீப் பிஷ்னாய் கலந்து கொண்டார்.
இது இப்படி இருக்க காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட டின்னரில், பாஜகவைச் சேர்ந்த எம்.பி பங்கேற்றார்.
பாஜகவிலிருந்து விலகி சமாஜவாடி கட்சியில் இணைந்த எம்.பி. பிரிஜ்பூஷன் சரண்சிங்தான் அவர். டெல்லி அசோகா ஹோட்டலில் நடந்த விருந்துக்கு அவர் வந்திருந்தார்.
அமர்சிங்தான் சரண் சிங்கை அழைத்து வந்து செய்தியாளர்களிடம் அறிமுகப்படுத்தினார்.
காங் விருந்தில் எல்ஜி-செஞ்சி:
இந்த விருந்தில் மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட எம்.பிக்களான செஞ்சி ராமச்சந்திரனும், எல்.கணேசனும் கூட கலந்து கொண்டனர்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபு சோரன், தனது கட்சியின் எம்.பிக்களோடு பங்கேற்றார்.












Click it and Unblock the Notifications