இது இந்திய-அமெரிக்க ஒப்பந்தமில்லை, புஷ்-சிங் ஒப்பந்தம்-அத்வானி
அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்தின் மீது விவாதத்தை துவக்கி வைத்து அவர் பேசுகையில்,
அணு ஒப்பந்தம் மிக மிக முக்கியமானது என்றால், அதை ஏன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தனது குறைந்தபட்ச செயல்திட்டத்தில் சேர்க்கவில்லை.
அணு ஒப்பந்தத்தை ஏற்கும் முன் முதலில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அனுமதி வாங்கியிருக்க வேண்டும். ஏன் அதைச் செய்யவில்லை...
மேலும் இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையிலானதாக நான் கருதவில்லை. இது இரு தனிப்பட்ட மனிதர்களுக்கு (அதிபர் ஜார்ஜ் புஷ்-பிரதமர் மன்மோகன் சிங்) இடையிலானதாகத் தான் கருத வேண்டியுள்ளது.
நாங்கள் அணு ஆயுத ஒப்பந்தத்துக்கு எதிரானவர்களோ அல்லது அமெரிக்காவுடனான உறவுக்கோ எதிரானவர்கள் அல்ல. ஆனால், இந்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் சம நிலையில் (equal partner) இல்லை. அமெரிக்கா சொல்வதை செய்ய வேண்டிய நிலையில் தான் இந்தியா உள்ளது.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிதான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு. இந்த கூட்டணி அரசு பிழைக்குமா என்பது தெரியவில்லை. பிரதமர் மன்மோகன் சிங்கும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியாவும், கூட்டணி தர்மம் மீது நம்பிக்கையற்றவர்களாக உள்ளனர்.
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பிறகே சர்வதேச அணுசக்திக் கழகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று பிரணாப் முகர்ஜி அறிவித்திருந்தார். ஆனால் ஓட்டெடுப்புக்கு முன்னதாகவே வியன்னாவுக்கு இந்திய அதிகாரிகள் சென்று விவாதம் நடத்தியுள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அனுமதி இல்லாமல் பிரதமர் இந்த ஒப்பந்ததை செய்திருக்க மாட்டார்.
இந்த அரசின் ஒரே அஜெண்டாவே அணு ஒப்பந்தம் தான் என்றாகிவிட்டது. கடந்த சில மாதங்களாக இந்த அரசு எதிலுமே கவனம் செலுத்தவில்லை. ஒரே விவகாரத்தில் மூழ்கி செயலற்றுப் போய்க் கிடந்த அரசை நான் இதுவரை பார்த்ததில்லை.
இந்த அரசை நாங்கள் நாடாளுமன்றத்தில் தோற்கடிக்க விரும்புகிறோம். அதே நேரத்தில் ஸ்திரத்தன்மையை குலைக்க விரும்பவில்லை என்றார் அத்வானி.
ஸ்திரத்தன்மையை குலைக்க விரும்பவில்லை என அத்வானி பேசியது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. அரசு தப்பிவிடும் என்பதைத் தான் அவர் இவ்வாறு குறிப்பிட்டார் என பல எம்பிக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
முன்னதாக கூட்டணி தர்மம் குறித்து அத்வானி பேசிக் கொண்டிருந்தபோது, அமைச்சர்கள் ஜெய்ப்பால் ரெட்டியும் லாலுபிரசாத் யாதவும் இடைமறித்து பாஜகவைத் தாக்கியதால் கடும் அமளி ஏற்பட்டது.
மேலும் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒரு முறை எழுந்து அத்வானிக்கு பதி்ல் அளித்தார்.