சைக்கோ கொலைகாரனின் கைரேகை சிக்கியது
சென்னை: சென்னையைக் கலக்கி வரும் சைக்கோ கொலைகாரனின் கைரேகை சிக்கியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை நகரின் மையப் பகுதிகளான கே.கே.நகர், அசோக் நகர், மாம்பலம், வடபழனி ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து 8 பேர் படுகொலை செய்யப்பட்டனர். தலையில் கல்லால் நசுக்கியும், தீவைத்து எரித்தும் இவர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இறந்தவர்களில் பெரும்பாலானோர் காவலாளிகள். கொலை செய்த விதம் ஒரே மாதிரியாக இருப்பதால் கொலையாளி ஒரே நபராகத்தான் இருக்க முடியும், அவர் சைக்கோவாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில் சவுந்தரபாண்டியனார் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சந்திரசேகரன் என்பவர், சைக்கோ கொலையாளியை கடந்த வியாழக்கிழமை அதிகாலையில் நேரில் பார்த்ததாக கூறினார்.
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவன் கையில் இரும்பு கம்பி வைத்திருந்ததாகவும், கருப்பு நிற முக்கால் பேன்டும், வெள்ளை நிற டீ சர்ட்டும் அணிந்திருந்ததாகவும், அவனுக்கு 30 முதல் 35 வயதிற்குள் இருக்கலாம் என்றும் சந்திரசேகரன் கூறியுள்ளார்.
அவர் சொன்ன தகவல்களை வைத்து சைக்கோ கொலைகாரனின் படத்தை போலீசார் கம்ப்யூட்டரில் வரைந்து வருகிறார்கள். கொலைகாரனை பிடிக்கும் பணியில் போலீஸ் கமிஷனர் சேகர் உள்பட 1000 போலீசார் ஈடுபட்டுள்ளனர். தினமும் அதிகாலை 4 மணி வரை கமிஷனர் சேகர் ரோந்து சுற்றி வருகிறார்.
இணை கமிஷனர் குணசீலன், துணை கமிஷனர்கள் முத்துசாமி, மவுரியா, வரதராஜூ, ஸ்ரீதர் ஆகியோரும் வடபழனி பகுதியில் முற்றுகையிட்டு விசாரித்து வருகிறார்கள். தனிப்படைகள் அமைக்கப்பட்டு விடிய விடிய தேடுதல் வேட்டையும் நடந்து வருகிறது.
நேற்றிரவு கமிஷனர் சேகர் நேரடியாக இரவு ரோந்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில், வடபழனி, அசோக்நகர், மேற்கு மாம்பலம் ஆகிய பகுதிகளில் சமீப காலங்களில் இரவு நேரங்களில் மர்மமான முறையில் கொலை சம்பவங்கள் நடந்து வந்துள்ளன. இதில் ஏற்கனவே நடைபெற்ற கொலை சம்பவங்கள் தொடர்பான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சமீபத்தில் நடைபெற்ற 3 கொலை சம்பவங்கள் தொடர்பான நபர்கள் மட்டும் தேடப்பட்டு வருகின்றனர். இந்த 3 கொலைகளும் ஒரே விதமான முறையில் நிகழ்ந்துள்ளன. பொதுமக்கள் இது குறித்து பீதி அடைய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
தடயம் சிக்கியது:
இந்நிலையில் அசோக்நகர் 18-வது அவென்யூவில் காவலாளி பாட்ஷா கொலை செய்யப்பட்ட இடத்தில் ஒரு கைரேகை சிக்கியுள்ளது. அந்த கைரேகை புதிதாக இருப்பதால் அது சைக்கோ கொலைகாரனுடையதாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுவரை சந்தேகத்தின் பேரில் சுமார் ஆயிரம் பேரின் கைரேகையை எடுத்து விசாரணை நடத்தி உள்ளனர். விரைவில் கொலைகாரனை பிடித்து விடுவோம் என்ற உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.