திமுக உண்ணாவிரதம் கண் துடைப்பு நாடகம்: ஜெ.
சென்னை: கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றும், தமிழக மீனவர்களை காக்கக் கோரியும் திமுகவினர் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் கருணாநிதி நடத்திய கண்துடைப்பு நாடகம் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல்கள் குறித்து எதிர்ப்புக்குரல் வலுப்பதை அறிந்த முதலமைச்சர் கருணாநிதி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் நான் எந்த தேதியில் அதிமுக சார்பில் போராட்டம் என்று அறிவித்தேனோ அதே தேதியில் தமிழகம் முழுவதும் திமுக உண்ணா விரதப்போராட்டம் என்று அறிவித்து ஒரு கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றி முடித்தார்.
கச்சத்தீவை விட்டுத்தர முடியாது என்று 21.8.1974 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதை முன்மொழிந்ததாக கருணாநிதி கூறியிருக்கிறார். ஆனால் இந்திய இலங்கை ஒப்பந்தம் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் 26.6.1974 அன்றும், இலங்கை பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகாவால் 28.6.1974 அன்றும் கையெழுத்திடப்பட்டுள்ளது.
அதாவது, ஒப்பந்தம் கையெழுத்தாகி கிட்டத்தட்ட 2 மாதங்கள் கழித்து தான் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானத்தை கருணாநிதி நிறை வேற்றியிருக்கிறார். தமிழ்நாட்டின் மீதும், தமிழர்கள் மீதும் அவருக்குள்ள பற்று இதன் மூலம் நன்கு தெளிவாகிறது.
கச்சத்தீவை தாரைவார்க்க இந்தியா தயாராகிவிட்டது என்பது கருணாநிதிக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கிறது. ஆனால், எதுவும் தெரியாதது போல நாடகமாடி வழக்கம்போல இந்திய இலங்கை உடன்பாடு கையெழுத்தான பிறகு பிரதமருக்கு கடிதம் எழுதியும், தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில் தீர்மானம் இயற்றியும் ஒரு கண்துடைப்பு நாடகத்தை 1974ம் ஆண்டிலேயே கருணாநிதி அரங்கேற்றியிருக்கிறார் என்பது அவருடைய கூற்று மூலம் நன்கு தெரிகிறது.
சட்டமன்ற தீர்மானத்தில் கூட மத்திய அரசு செய்துகொண்ட ஒப்பந்தம் "வருத்தம் அளிக்கிறது' என்று கருணாநிதி குறிப்பிட்டு இருக்கிறாரே தவிர, "எதிர்க்கிறோம்' என்ற சொல் எங்கேயும் இடம் பெறவில்லை.
கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்கும் ஒப்பந்தத்தில் இந்திய மைய அரசு கையொப்பமிட்டு முடிக்கும் வரை இதனை எதிர்க்கிறோம் என்று ஒரு வார்த்தை சொல்ல துணிவோ, திராணியோ இல்லாத கருணாநிதி, ஒப்பந்தம் கையெழுத்தாகி எல்லாம் முடிந்து 2 மாதங்கள் ஆன பின்னர் தமிழக சட்டமன்றத்தில் "இந்த ஒப்பந்தம் வருத்தம் அளிக்கிறது... இதனை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என்று தான் சமாளிப்பு வார்த்தைகளை சமாதான தொனியில் மிக அடக்கமாக கூறி யிருக்கிறாரே தவிர எங்கேயும் தப்பித் தவறி கூட மத்திய அரசு கச்சத்தீவை தாரை வார்த்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தற்போதைய தொடர் தாக்குதலுக்கு கச்சத்தீவை தாரை வார்ப்பதற்கு உடந்தையாக இருந்த கருணாநிதிதான் காரணம் என்ற குற்றம் தன் மீது வந்துவிடுமே என்பதற்காக காதில் பூ சுற்றும் வேலையில் இறங்கியிருக்கிறார். கண் துடைப்பு நாடகத்தை நடத்தியிருக்கிறார் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications