ஒகேனக்கல் திட்டம் சட்டவிரோதமாம்-கூறுகிறது கர்நாடகா
பெங்களூர்: ரூ.1,334 கோடி செலவில் தமிழக அரசுதிட்டமிட்டுள்ள ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் சட்டவிரோதமானது என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இத்திட்டம் தொடர்பாக விவாதிக்க நாளை அங்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தவுள்ளது. ஆனால் இந்தத் திட்டத்தை எதிர்த்து கர்நாடகாவில் வன்முறை வெடித்தது. தமிழர்கள் தாக்கப்பட்டனர். பதிலுக்கு முதல் முறையாக தமிழகத்திலும் கர்நாடகத்ைத எதிர்த்து வன்முறை வெடித்தது. இரு மாநிலங்களிலும் கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் தேர்ந்தெடுக்கப்படும் அரசு வரும் வரைதிட்டத்தை நிறுத்தி வைப்பதாக முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
கர்நாடகத்தில் தேர்தல் முடிந்து பாஜக அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து இத் திட்டம் திட்டமிட்டபடி நிறைவேற்றப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.
இந்த நிலையில் ஓகனேக்கல் திட்டத்தை மீண்டும் கர்நாடகா கையில் எடுத்துள்ளது. திட்டம் குறித்த விவாதிக்க பெங்களூரில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
நேற்று கர்நாடக சட்டசபையில் நடந்த விவாதத்தின்போது, ஒகேனக்கல் திட்டத்தை நிறுத்த இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று காங்கிரஸ் எம்எல்ஏ குருபாதப்பா நாகமரப்பள்ளி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து முதல்வர் எடியூரப்பா பேசுகையில், நிலம், நீர், மொழி, எல்லை போன்ற பிரச்னைகளில் இந்த அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. ஒகேனக்கல் திட்டம் சட்டத்துக்கு புறம்பானது. இதுகுறித்த விவரங்களை தமிழக அரசிடம் கேட்டுள்ளோம்.
திட்டத்தை ஒத்திவையுங்கள் என்று தமிழக அரசை கர்நாடக அரசு வற்புறுத்தியுள்ளது. தேசிய நீர்மின் உற்பத்திக் கழகத்தின் மூலம் காவிரி ஆற்றில் பல நீர்மின் திட்டங்களுடன் ஒகேனக்கல் திட்டத்தையும் செயல்படுத்த மத்திய அரசு, கர்நாடக மற்றும் தமிழக அரசுகளுக்கு இடையே பேச்சு வார்த்தை நடந்தது. இரண்டு மாநிலங்களுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்படாததால் தேசிய நீர்மின் கழகம் திட்டத்தை எடுத்துக் கொள்ளவில்லை.
இத்திட்டத்தை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றவும், அனைத்துக் கட்சிகள் கொண்ட குழுவை டெல்லிக்கு அழைத்து செல்லவும் தயாராக இருக்கிறோம் என்றார்.
காங்கிரஸ் உறுப்பினர் சித்தராமையாவின் கேள்விக்கு பதிலளித்து அமைச்சர் ஈஸ்வரப்பா பேசுகையில், ஒகேனக்கல் திட்டம் சட்டவிரோதமானது. இதை தமிழக மற்றும் மத்திய அரசுக்கும் தெரிவித்தோம். நம்முடைய குரலுக்கு தமிழக அரசோ, மத்திய அரசோ பதிலளிக்கவில்லை.
கர்நாடக மாநில விஷயங்களில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது. நமது அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, கோவா, மகாராஷ்டிராவுக்கு சாதகமாகவே நடந்து கொள்கிறது.
தமிழக அரசின் இந்த திட்டத்தை நிறுத்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஏனென்றால் ஐமு கூட்டணிக்கு ஆளும் திமுகவின் ஆதரவு இருக்கிறது.
நதிநீர் பிரச்னையை பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள முயற்சி எடுத்திருக்கிறோம். தவிர்க்க முடியாத நிலையில் நீதிமன்றத்துக்கு சென்று மாநில நலனை காப்போம் என்றார்.












Click it and Unblock the Notifications