என்னை கொத்தடிமையாக நடத்த முயன்றனர்-மன்மோகன்
டெல்லி: இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர் என பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாட்டினார்.
மேலும் பாபர் மசூதியை இடித்து, நாட்டில் பெரும் மதக் கலவரத்தை ஏற்படுத்திய அத்வானியை மன்னிக்க முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களவையில் நடந்த நம்பிக்கைத் தீர்மானத்தின் மீது தனது பதிலை அறிக்கையாகத் தாக்கல் செய்தார் பிரதமர். அதில் அவர் கூறியிருப்பதாவது:
அத்வானிக்கெல்லாம் பதில் சொல்லி என் நேரத்தையும் இந்த அவையின் பொன்னான நேரத்தையும் வீணாக்க நான் விரும்பவில்லை.
ஒருவரை குறை சொல்லும் முன் முதலில் அத்வானி தன் தவறுகளை நினைத்துப் பார்க்க வேண்டும்.
பாபர் மசூதியை இடித்து, நாட்டில் பெரும் மதக் கலவரத்தை ஏற்படுத்திய அத்வானியை மன்னிக்க முடியுமா.
தனது உரையில் அத்வானி என்னைப் பற்றி மிக மோசமான வார்த்தைகளை பயன்படுத்தினார். என்னை மிக பலவீனமான பிரதமர் என்றார், என் அரசை கவிழ்க்க 3 முறை முயன்றனர்.
அவரை அவரது ஜோதிடர்கள் தவறாக வழி நடத்திவிட்டார்கள் என்று நினைக்கிறேன். நாட்டின் நலனுக்காக அவர் முதலில் தனது ஜோதிடரை மாற்றிக் கொள்வது நல்லது.
அணு ஒப்பந்தத்தில் நான் எடுத்த ஒவ்வொரு நடவடிக்கைக்கும் இடதுசாரிகள் தடை போட்டனர். இது ஏற்கத்தக்கத்தல்ல. அவர்கள் என்னை தங்களது கொத்தடிமை போல நடத்த முயன்றனர்.
இப்போது அவர்கள் யாருடன் (பாஜக) கூட்டணி போட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார் பிரதமர்.












Click it and Unblock the Notifications