எங்களிடம் 41 எம்பிக்கள்- அமர்சிங் தகவல்
டெல்லி: சமாஜ்வாடி கட்சிக்கு மேலும் சில பகுஜன் சமாஜ் கட்சி எம்பிக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், தங்களது கட்சியிடம் இப்போது 41 எம்பிக்கள் உள்ளதாகவும் அக் கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங் கூறியுள்ளார்.
மேலும் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடாது என்று குண்டர்களை வைத்து தங்களது எம்.பிக்களை உ.பி. முதல்வர் மாயாவதி மிரட்டி வருகிறார் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் சற்று முன்பு பேசுகையில், அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடாது. மீறி வாக்களித்தால் விபரீத விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று அரசுக்கு ஆதரவாக உள்ள எம்.பிக்களை, மது ஆலை அதிபர்களின் உதவியுடன் குண்டர்களை வைத்து மிரட்டி வருகிறார் மாயாவதி.
எம்.பிக்களை மிரட்டுவதாகவும், குதிரை பேரம் நடத்துவதாகவும் எங்களைப் பார்த்து இடதுசாரிகள் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் இப்போது அணி சேர்ந்துள்ள கட்சியினர்தான் இந்த வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
மாயாவதியின் அரசியல், ஜனநாயகத்தை நசுக்கும் செயலாகும். அரசியலின் புனிதத்தைக் கெடுக்கும் செயலாகும்.
இப்போது சில பகுஜன் எம்பிக்களையும் சேர்த்து எங்களிடம் 41 எம்பிக்கள் உள்ளனர் என்றார் அமர்சிங்.
பாதுகாப்பு அதிகரிப்பு:
இதற்கிடையே எஸ்பி-பிஎஸ்பி இடையே மோதல் அதிகரித்து வருவதால், டெல்லியில் அமர்சி்ங்கின் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications