சேது திட்டம்-தடையை நீக்க கோரி மத்திய அரசு இன்று மனு

சேது சமுத்திர திட்ட கால்வாய் தோண்டும் பணி நடந்து வந்த நிலையில், ஆதாம் பாலத்தை (ராமர் பாலம்) மத்திய அரசு இடிக்கக் கூடாது என்று கூறி கடந்த ஆண்டு பாஜக, சில இந்து அமைப்புகள், சுப்பிரமணியம் சுவாமி உள்ளிட்டோர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதை விசாரித்த உச்சநீதிமன்றம் அந்தப் பாலத்தை இடிக்க இடைக்கால தடை விதித்தது. இதனால் சேது சமுத்திரத் திட்டப் பணிகள் முடங்கின.
மேலும் இந்தப் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்கக்கோரியும் இந்து அமைப்புகள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களில்,
ராவணனிடம் இருந்து தனது மனைவி சீதையை மீட்க இலங்கைக்கு செல்வதற்காக, வானர சேனைகள் உதவியுடன் ராமர் பாலத்தை கட்டினார் ராமர் என்பது உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கையாகும். எனவே, ராமர் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்க வேண்டும்.
அது புராதன சின்னம்தான் என்பதை உறுதிப்படுத்த, இந்திய தொல்பொருள் ஆராய்ச்சித்துறையின் ஆய்வுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டது.
இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் பி.சதாசிவம், ஜே.எம்.பாஞ்சால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வருகின்றன.
ராமர் பாலம் புராதன சின்னமா என்பதை கண்டறிய தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் ஆய்வுக்கு உத்தரவிடுவது பற்றி நீதிபதிகள் இன்று முடிவு செய்வர்.
அதே நேரத்தில் இன்றைய விசாரணையின்போது, சேது சமுத்திர திட்டத்தை விரைவாக நிறைவேற்ற விரும்புவதாக மத்திய அரசு தெரிவிக்கவுள்ளது.
எனவே இத் திட்டத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்குமாறும் மத்திய அரசு கேட்டுக் கொள்ளவுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ராமர் பாலம் எனப்படுவது, மனிதர்களால் கட்டப்பட்டது அல்ல. அது இயற்கையாக உருவான ஒரு புவியியல் தீவுத் திட்டு என்றும் மத்திய அரசு தெரிவிக்கவுள்ளது.
இது போன்ற பதில் மனுவை தாக்கல் செய்து திட்டத்துக்கு மீண்டும் விரைவாக அனுமதியைப் பெறுமாறு மத்திய அரசை திமுக வலியுறுத்தி வந்தது. ஆனால், இந்த விஷயத்தை ஆறப் போட்டிருந்தது மத்திய அரசு.
இந் நிலையில் மக்களவையில் நம்பிக்கைத் தீர்மானத்தை சந்திக்கும் மத்திய அரசு, சேது திட்ட விஷயத்தில் மீண்டும் உறுதியான முடிவுக்கு வந்துள்ளது.
விசாராணையை ஒத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு:
இதற்கிடையே இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்து அமைப்புகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள்,
இன்று லோக்சபாவில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளது. அதன் முடிவு தெரியும் வரை சேது சமுத்திர திட்ட விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்றனர்.
ஆனால், இதை தலைமை நீதிபதி கே.ஜி பாலகிருஷ்ணன் ஏற்க மறுத்துவிட்டார்.
அவர் கூறுகையில், நாட்டில் ஆயிரம் விஷயங்கள் நடக்கும். ஆனால் நீதிமன்றம் சட்ட விவகாரங்கள் மீது தான் அக்கறை கொள்ளும். லோக்சபாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கும் நீதிமன்றத்துக்கும் என்ன சம்பந்தம். அதற்காக வழக்கு விசாரணையை தள்ளி வைக்க முடியாது.
விசாரணை திட்டமி்ட்டபடி நடக்கும் என அறிவித்தார்.












Click it and Unblock the Notifications