பங்குச் சந்தையில் இன்று காளையின் துள்ளல்!
மும்பை: பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பெற்ற வெற்றி, இன்று பங்குச் சந்தையில் காளையின் துள்ளலாய் எதிரொலித்தது. மும்பை பங்குச் சந்தையில் இன்று எடுத்த எடுப்பிலேயே 582 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் களைகட்டியது.
அணுசக்தி ப்பந்த விவகாரத்தில் இடது சாரிகள் ஆதரவை வாபஸ் வாங்கியதால், கடந்த சில தினங்களாக அரசின் ஆயுள் ஊசலாட்டத்தில் இருந்த்து. பங்குச் சந்தையும் பெரும் சரிவைச் சந்தித்து வந்தது.
நேற்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோன்சிங் அரசு அமோகமாக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அரசு நீடிக்குமா என்ற சந்தேகம் தெளிந்துவிட்டது முதலீட்டாளர்களுக்கு. இதைத் தொடர்ந்து இன்ட்ரா டே எனப்படும் தினசரி பங்கு வர்த்தகம் காலையிலேயே சூடுபிடித்துவிட்டது.
சென்செக்ஸ் குறியீட்டெண் 582 புள்ளிகள் உயர்ந்து 14676 ஆகவும், நிப்டி 166 புள்ளிகள் உயர்ந்து 4406 என்ற நிலையும் தற்போது உள்ளன.
பெல் நிறுவனப் பங்குகள் விலை இன்று 9 சதவிகிதம் உயர்ந்து காணப்பட்டது. வங்கித் துறைப் பங்குகள் பெரும்பாலும் இன்று நல்ல விலைக்கு விற்பனையாகின. இன்று முழுவதும் இதே நிலை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.