ரூ.57 லட்சம் வழிப்பறி- இலங்கை அகதி கைது
கும்பகோணம்: கும்பகோணம் அருகில் ரூ 57 லட்சம் பணம் வழிப்பறி செய்த சம்பவத்தில் இலங்கை அகதி ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
திருவையாறு செட்டித் தெருவில் வசிப்பவர் ராஜேந்திரன். பாமாயில் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். கடைகளுக்கு பாமாயில் சப்ளை செய்ததில் வசூலான ரூ.56 லட்சத்து 60,000ஐ கணக்காளர் ரவியிடம் கொடுத்து கும்பகோணத்தில் உள்ள ஒரு வங்கியில் டி.டி. எடுத்து வருமாறு கூறியுள்ளார்.
பணத்துடன் வேனில் ரவி வங்கிக்கு புறப்பட்டார். சுந்தரப்பெருமாள் கோயில் அருகே 8 பேர் கொண்ட மர்ம கும்பல் வேனை வழி மறித்தது. வண்டிக்குள் இருந்த ரவியிடம் இருந்த பணத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் கொள்ளையடித்து சென்றனர்.
இது குறித்து போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து டிஎஸ்பி சீனிவாசன் தலைமையில் 6 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக திருவள்ளூர் நீதிமன்றத்தில் விஜய் என்ற வாலிபர் சரணடைந்தார்.
அவரை போலீசார், காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், விஜய், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள அகதிகள் முகாமில் தங்கி இருப்பதும், கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களுக்கு வாகனங்களும், கூலிப்படையும் கொடுத்தது தெரிய வந்தது.
இதனையடுத்து விஜயிடம் இருந்த ரூ.96,000 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். விஜய் கொடுத்த தகவலின்படி ஒருவரை கைது செய்துள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications