பாமகவிற்கு குரங்கு சின்னம்-விஜயகாந்த் மன்றம்
கரூர்: அடிக்கடி கூட்டணி மாறும் பாமகவிற்கு தேர்தல் ஆணையம் குரங்கு சின்னம் வழங்க வேண்டும் என்று விஜயகாந்த் மன்ற நிர்வாகி நக்கலாக தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பஞ்சபட்டியில் தேமுதிக சார்பில் விலைவாசி உயர்வை தடுக்க கோரி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது அதில் கலந்து கொண்ட விஜயகாந்த் மன்ற மாநில துணைச் செயலாளர் ராஜ சந்திரசேகரன் பேசியதாவது:
தமிழகத்தில் திமுக, அதிமுகவிற்கு இணையாக தேமுதிக வளர்ந்து வருகிறது. விஜயகாந்த்தின் ஆட்சியை தமிழ்நாடு எதிர்பார்த்துக் கொண்டுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் சீரழிந்து வருகிறது.
முதல்வர் கருணாநிதியின் தவறான வழிகாட்டுதலில் தமிழகம் செல்கிறது. திமுக அரசின் இலவச டிவி, 2 ஏக்கர் நிலம், இலவச காஸ் அடுப்பு வழங்குதல் போன்ற திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை. திமுகவினருக்கேதான் அவை கிடைத்துள்ளது.
அடிக்கடி அணி மாறுவதில் பாமகவிற்கு நிகர் உலகில் எந்த கட்சியும் இல்லை. அந்த கட்சிக்கு வழங்கப்பட்டுள்ள மாம்பழ சின்னத்திற்கு பதிலாக குரங்கு சின்னம் வழங்கினால் பொறுத்தமாக இருக்கும் என்றார்.