மின்வாரிய தலைமை பொறியாளர் ரெய்ட்-கோடிகள் சி்க்கின
ஈரோடு: ஈரோடு மின்வாரிய தலைமை பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் பல கோடி ரூபாய் மதிப்பிலுள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு நியூ டீச்சர்ஸ் காலனியில் வசிப்பவர் நடேசன் (55). மின்வாரிய அலுவலகத்தில் தலைமை பொறியாளராக பணியாற்றுகிறார். இவரது மாத சம்பளம் ரூ.48,000. இவரது மனைவி மல்லிகா. தனியார் கல்லூரி பேராசிரியராக பணியாற்றுகிறார். இவர் மாதம் ரூ.40,000 சம்பளம் பெற்று வருகிறார்.
இவரது மகன் சத்திய பிரகாஷ் பெங்களூரில் கிளினிக் நடத்தி வருகிறார். இவரது மகள் தேவி, பல் டாக்டர். கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணமாகி மலேசியாவில் வசிக்கிறார்.
தேவியின் திருமணத்தின்போது, மின்வாரிய பொறியாளர்கள் அனைவரும் ஒரு பவுன் வழங்க வேண்டும் என்று நடேசன் உத்தரவிட்டதாக சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
மேலும் வெண்டிப்பாளையம் மற்றும் பாசூர் பகுதிகளில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.150 கோடி செலவில் கதவணை மின் உற்பத்தி நிலையம் கட்டும்பணி நடக்கிறது. இதை கான்ட்ராக்ட் எடுத்தவர்களிடமும் நடேசன் லஞ்சம் பெற்றதாக புகார் வந்துள்ளது.
இதையடுத்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அரசு அனுமதியுடன் நடேசன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். லஞ்ச ஒழிப்பு ஏடிஎஸ்பி கிரிமுருகன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ், சுந்தர்ராஜன் தலைமையிலான போலீசார் நடேசன் வீட்டில் அதிரடி ரெய்டு மேற்கொண்டனர்.
சென்னை மற்றும் கோவை, சேலத்தில் அடுக்குமாடி வீடும், தற்போதுள்ள ஆடம்பர பங்களா மற்றும் 6 ஏக்கர் விவசாய நிலம் என கோடிக்கணக்கில் சொத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்தியன் வங்கி, யூகோ மற்றும் கூட்டுறவு வங்கிகளில் நடேசன் பெயரில் உள்ள லாக்கர்களை போலீசார் முடக்கியுள்ளனர். அவற்றில் இன்று ரெய்டு நடக்கிறது.
நடேசனுக்கு உடந்தையாக செயல்பட்ட மின்வாரிய அதிகாரிகள் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு நடத்த முடிவு செய்துனர். இதனால் பல அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications