வக்கீல்களுக்கு சித்திரவதை: விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
சென்னை: சென்னையைச் சேர்ந்த 3 வக்கீல்களை கோவை போலீஸார் தாக்கி சித்திரவதை செய்தது தொடர்பான புகாரை விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மலைசுப்ரமணியத்தை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது.
ஆகஸ்ட் 22ம் தேதிக்குள் தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு நீதிபதி மலைசுப்ரமணியத்திற்கு, நீதிபதிகள் முருகேசன், பழனிவேலு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூலை 11ம் தேதி கோவை கணபதி பகுதியில் ஜெயந்தி என்பவருக்கும், அவரது பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது.
இந்த சம்பவத்திற்குப் பின்னர் ஜெயந்தியும், அவருக்கு ஆதரவாக வாதிட வந்த சென்னையைச் சேர்ந்த வக்கீல்கள் இளங்கோ, சின்னழகு, மணிவண்ணன் ஆகியோரைக் காணவில்லை.
இதையடுத்து ஜெயந்தியின் சகோதரரான வக்கீல் கோகுலகிருஷ்ணன் உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார்.
அதில், போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 3 வக்கீல்கள் மற்றும் ஜெயந்தியின் நிலை என்னவென்று தெரியவில்லை. அவர்களை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோரி வக்கீல் கோகுலகிருஷ்ணன் மனுவில்கோரியிருந்தார்.
இதுதொடர்பான வழக்கு ஜூலை 15ம் தேதி விசாரணைக்கு வந்தபோது போலீஸ் ஏட்டு ஒருவரை வக்கீல்கள் சிலர் சேர்ந்து சரமாரியாக அடித்தது நினைவிருக்கலாம். அன்று மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்தப் புகார் குறித்து இன்ஸ்பெக்டர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை நியமித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சேலம் போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டிருந்தது.
மேலும், சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ், ஜெயந்தியை தாக்கினாரா என்பது குறித்தும் விசாரிக்க உத்தரவிட்டிருந்தது.
நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போதுசேலம் போலீஸ் தரப்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், வக்கீல்கள் கூறியுள்ள புகார்கள் பொய்யானவை. கணபதி பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில், நான்கு பேரும் தாங்களாகவே தங்கியிருந்தனர். போகும்போது பில்லைக் கூட கட்டாமல் போய் விட்டனர் என்று கூறப்பட்டிருந்தது.
அப்போது கோகுலகிருஷ்ணன் சார்பில் ஆஜரான வக்கீல்கள் பால்கனகராஜ் மற்றும் பிரபாகரன் ஆகியோர் எழுந்து, கோவை போலீஸாரைக் காக்க சேலம் போலீஸார் முயலுகின்றனர். எனவேதான் போலியான விசாரணை அறிக்கையை தாக்கல்செய்துள்ளனர் என்றனர்.
இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி மலைசுப்ரமணியம் இதுகுறித்து விசாரித்து ஆகஸ்ட் 25ம் தேதி தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications