கூட்டணி: காங்கிரஸுடன் சமாஜ்வாடி ஆலோசனை
டெல்லி: எதிர்காலத்தில் கூட்டணியை எப்படி கொண்டு செல்வது, கூட்டணியை எப்படி வலுப்படுத்துவது என்பது குறித்து காங்கிரஸ் கட்சியுடன், சமாஜ்வாடி கட்சி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்ப சமாஜ்வாடி கட்சியின் ஆதரவுதான் மிக முக்கியமானதாக இருந்தது. இதையடுத்து எதிர்காலத்திலும் கூட்டணியை நீடிக்க இரு கட்சிகளும் முடிவு செய்துள்ளன.
கூட்டணியை வலுப்படுத்துவது, உபியில் கூட்டணியை தொடருவது குறித்து விவாதிக்க இரு கட்சிகளும் ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளன.
இதுதொடர்பாக சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளர் அமர்சிங், காங்கிரஸ் தலைவர்களுடன் நேற்று பேச்சு நடத்தினார். அப்போது உ.பி.தேர்தலில் எப்படி செயல்படுவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
இதற்கிடையே, வருகிற நவம்பர், டிசம்பர் மாத கால கட்டத்தில் நடைபெறவுள்ள மத்தியப் பிரதேச மாநில சட்டசபைத் தேர்தலை சந்திப்பது தொடர்பான பூர்வாங்கப் பணிகளில் காங்கிரஸ் தீவிரமாகியுள்ளது.
இங்கும் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி வைக்கிறது காங்கிரஸ். இங்கு சமாஜ்வாடி கட்சிக்கு 7 எம்.பிக்களும், 23 எம்.எல்.ஏக்களும் தற்போது உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் - சமாஜ்வாடி இணைந்து போட்டியிட்டால் கணிசமான எம்.பி.தொகுதிகளையும், சட்டசபை தொகுதிகளையும் பிடித்து விட முடியும் என காங்கிரஸ் நம்புகிறது.
கடந்த 2003ல் ம.பியில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக அறுதிப் பெறும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சிக்கு 38 இடங்களே கிடைத்தன.












Click it and Unblock the Notifications