அத்வானி-3 பாஜக எம்.பிக்கள் மீது சமாஜ்வாடி அவதூறு வழக்கு
லக்னோ: தனது கட்சிக்கு எதிராக அவதூறான புகார்களைக் கூறி பெயரைக் கெடுக்க முயல்வதாக கூறி பாஜக தலைவர் எல்.கே.அத்வானி மற்றும் 3 பாஜக எம்.பிக்கள் மீது சமாஜ்வாடி கட்சி லக்னோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துல்ளது.
இதுதொடர்பாக லக்னோ சிபிஐ, சிறப்பு கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் கவின்சிலரும், வக்கீலுமான கிஷோர் லால் யாதவ் இன்று ஒரு மனுவைத் தாக்கல்செய்தார்.
அதில், பாஜக எம்.பிக்கள் அசோக் அர்கல், மகாவீர் சிங் பகோரா, அஜ்ஜான் சிங் குலஸ்தே ஆகியோர் லோக்சபாவில் ஜூலை 22ம் தேதி கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுக்களைக் காட்டி அந்தப் பணத்தை சமாஜ்வாடி பொதுச் செயலாளர் அமர்சிங்தான் கொடுத்தார் என்று கூறினர்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகிக்க வேண்டும் என்று கூறி அந்தப் பணத்தைக் கொடுத்ததாகவும் அவர்கள் கூறினர்.
பின்னர் நாடாளுமன்றத்திற்கு வெளியே இந்த மூன்று எம்.பிக்களும் சமாஜ்வாடி கட்சிக்கும், அதன் தலைவர்களுக்கும் அவப் பெயரை ஏற்படுத்தும் வகையில் பேட்டிகளையும் அளித்தனர்.
இதேபோல அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானியும் சமாஜ்வாடி தலைவர்களை அவமதிக்கும் வகையில் பேட்டி அளித்துள்ளார். இந்த நான்கு பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
3 எம்.பிக்களும் புகார் அளித்தனர்:
முன்னதாக சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியின் உத்தரவின் பேரில், சமாஜ்வாடி தரப்பிலிருந்து தங்களுக்குப் பணம் கொடுத்ததாக புகார் கூறிய 3 பாஜக எம்.பிக்களும் இன்று சபாநாயகர் சோம்நாத்தை சந்தித்து முறைப்படி எழுத்துப்பூர்வமான புகாரை அளித்தனர்.
இந்தப் புகாரில் அமர்சிங், சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த ரேவதி ரமன் சிங், காங்கிரஸ் கட்சியின் அகமது படேல் ஆகியோர்தான் தங்களுக்குப் பணம் கொடுத்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.
6 சமாஜ்வாடி எம்பிக்கள் நீக்கம்:
இதற்கிடையே நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக வாக்களித்த 6 எம்பிக்களை அக் கட்சி நீக்கியுள்ளது.