தமிழகத்துக்கு 'ஜாக்பாட்'-ரூ. 32,000 கோடியில் 2 மெகா மின் திட்டங்கள்
சென்னை: தமிழகத்தில் தலா 4,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறனுடைய 2 மெகா நிலக்கரி மின் திட்டங்களை ரூ. 32,000 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசு செயல்படுத்தவுள்ளது.
இது குறித்து டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய முதல்வர் கருணாநிதி கூறுகையில்,
இதில் ஒரு திட்டம் செய்யூரிலும், இன்னொரு திட்டம் மரக்காணம் அல்லது கடலூரிலும் செயல்படுத்தப்படும்.
இதற்கான இடங்களைத் தேர்வு செய்ய மத்திய நிபுணர் குழு வரும் 29ம் தேதி தமிழகம் வரவுள்ளது.
இந்த இரு அல்ட்ரா மெகா மின் திட்டங்கள் மூலம் 8000 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்குக் கிடைக்கும்.
தமிழகத்தின் மின்சாரத் தேவையை கருத்தில் கொண்டு மத்திய தொகுப்பிலிருந்து தினசரி 100 மெகாவாட் மின்சாரம் வழங்கவும் மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. மின்சாரப் பற்றாக்குறை குறித்து பிரதமரிடம் நான் விரிவாக எடுத்துரைத்தேன்.
இதையடுத்து, மத்திய மின்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவுடன் அவர் ஆலோசனை நடத்தி, தினசரி 100 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்தார். பிற மாநிலங்களிலும் மின்சார பற்றாக்குறை இருப்பதால் இவ்வளவுதான் அளிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் நிலவி வரும் மின்சாரப் பற்றாக்குறையைப் போக்க எனது அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்றார் கருணாநிதி.
தான் கட்டிய பாலத்தை தானே இடித்து விட்டார் ராமர் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு அது உச்சநீதிமன்றத்தில் உள்ள விவகாரம். எனவே அதுகுறித்து கருத்து கூற முடியாது என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications