பெங்களூரில் தினமும் 6 மணி நேரம் மின்தடை
பெங்களூர்: ஐடி தலைநகரான பெங்களூர் கடும் மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 20 சதவீத மின்வெட்டை அமல்படுத்தப் போவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் பல மாநிலங்களில் கடும் மின்சாரப் பற்றாக்குறை நிலவுகிறது. தமிழகத்தில் நிலவி வரும் மின்சாரப் பற்றாக்குறையை சமாளிக்க மாநகராட்சிப் பகுதிகளில் தினசரி 2 மணி நேரமும், நகராட்சி உள்ளிட்ட பிற பகுதிகளில் தினசரி 4 மணி நேரமும் மின் தடை அமல் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர தொழிற்சாலைகளுக்கு சுழற்சி முறையில் ஒரு நாள் மின்தடை அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஆந்திராவில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. அங்கு நிலவும் மின்சாரத் தட்டுப்பாடு காரணமாக தொழிற்சாலைகளுக்கு வாரம் 2 நாள் மின்தடையை அரசு அறிவித்துள்ளது.
இந்தநிலையில் ஐடி தலைநகரான பெங்களூர் கடும் மின் தட்டுப்பாட்டுக்கு ஆளாகியுள்ளது. இதையடுத்து அங்கு 20 சதவீத மின் தடையை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி தினசரி 6 மணி நேர மின் தடை அமல்படுத்தப்படவுள்ளது.
இதுவும் தற்காலிகமாகதான். மின் உற்பத்தி அதிகரிக்காவிட்டால் அல்லது போதிய மழை இல்லாவிட்டால் மின் தடை 8 மணி நேரமாக அதிகரிக்கப்படும் என அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த மின் தடை குறித்து கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், கிட்டத்தட்ட நாள் முழுவதும் பரவலாக மின் தடை காணப்படுகிறது. இதை திட்டமிட்டு அமல்படுத்தினால் மக்களுக்கு சிரமம் இருக்காது. இதனால் விவசாயிகளும், தொழில் நிறுவனங்களும் முன் கூட்டியே திட்டமிட்டுசெயல்பட முடியும் என்றார்.
இது போதாதென்று டீசல் பற்றாக்குறையும் பெங்களூரை வாட்டிக் கொண்டிருக்கிறது. பெங்களூருக்கு ஒருநாளைக்கு 1800 கிலோலிட்டர் டீசல் தேவைப்படும். ஆனால் அதில் 40 சதவீத அளவுக்கு சப்ளை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் டீசலை நம்பியிருக்கும் வாகனங்கள், தொழில் நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.












Click it and Unblock the Notifications