இலவச கலர் டிவி கேரளாவுக்கு கடத்தல்
செங்கோட்டை: கேரளாவுக்கு கடத்த இருந்த தமிழக அரசின் இலவச கலர் டிவிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அகமதாபாத், பெங்களூர் குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து தமிழக எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி தமிழக-கேரள எல்லை பகுதியில் செங்கோட்டை போலீசார் தீவிர வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கேரள பதிவு எண் கொண்ட ஜீப்பை பரிசோதித்தபோது தமிழக அரசால் வழங்கப்படும் 6 இலவச கலர் டிவிகள் சீல் உடைக்கப்படாமல் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து ஜீப் டிரைவர் ரமேஷ், அவருடன் இருந்த காளிமுத்து ஆகியோரிடம் விசாரித்தனர்.
விசாரணையில் கடந்த 26ம் தேதி கடையநல்லூர் தொகுதி கம்பனேரியில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட கலர் டிவிக்கள் என்றும் டிவி ஒன்று ரூ.1,500 என்ற விலைக்கு வாங்கி கேரளாவில் ரூ.2,500க்கு விற்பதும் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து இலவச கலர் டிவிக்களும் ஜீப்பும் பறிமுதல் செய்யப்பட்டன. ரமேஷ், காளிமுத்து 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. தமிழக இலவச கலர் டிவிக்கள் கேரள சந்தைக்கு கொண்டு செல்லப்படுவது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications