பவர் கட் என்று கூறினால் 'பவர்' ஆஃப் ஆயிடும்: விஜயகாந்த்
தஞ்சாவூர்: பவர் கட், பவர் கட் என்று திமுக அரசு கூறிக் கொண்டே இருந்தால், மக்கள் அவர்களின் 'பவரை' ஆஃப் செய்து விடுவார்கள் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நிலவி வரும் மின் வெட்டைக் கண்டித்து தேமுதிக சார்பில் தஞ்சாவூரில் நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆயிரக்கணக்கானோர் திரண்ட ஆர்ப்பாட்டத்திற்கு விஜயகாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசுகையில்,
கர்நாடகத்தில் காவிரி உட்பட மூன்று நதிகள் ஓடுகிறது. ஆனால் நம் மாநிலத்தில் ஒரே ஒரு நதியை தான் நம்பியிருக்க வேண்டியுள்ளது. கர்நாடகா பணக்கார மாநிலமாகவும், தமிழ்நாடு ஏழை மாநிலமாகவும் இருக்கிறது.
தண்ணீர் பிரச்சனையை வைத்து கர்நாடகத்தில் அரசியல் செய்கிறார்கள். அதே போல் இங்கும் அரசியல் செய்கிறார்கள்.
தண்ணீர் கொடுக்காத காங்கிரஸ் கட்சிக்குத்தான் திமுக உறவாம். இது எப்படி இருக்கிறது? இலவச டிவி கொடுக்கும் நமது முதலமைச்சர், ஏன் அதற்கான இணைப்பை இலவசமாக கொடுப்பதில்லை?
விவசாயிகளுக்கு விதைப்பதற்கு நல்ல விதையும், விளைந்த விலை பொருட்களுக்கு நல்ல விலையும் கொடுங்கள் என்கிறோம். தேமுதிக ஆட்சிக்கு வந்தால் இவ்வாறு கொடுக்க முடியுமா என்கிறார்கள். கண்டிப்பாக நாங்கள் கொடுப்போம்.
விவசாயக் கடனை ரத்து செய்துள்ளோம் என்று மத்திய அரசும், மாநில அரசும் சொல்கிறது. ஆனால், ஏழை விவசாயிகளின் கடனை ரத்து செய்தார்களா? பணக்கார விவசாயிகள் தானே இதில் பலன் அடைகிறார்கள்.
சிறு, குறு விவசாயிகள் என்று கூறும் அரசு, அவர்களுக்கு விவசாயக்கடன் கொடுப்பதே இல்லை. இந்த விவசாயிகள் வங்கிக்கு சென்று கடன் கேட்டாலும் விரட்டப்படுகிறார்கள். இந்த அளவுக்கு மோசமான அரசுதான் இன்று நடந்து வருகிறது.
2 மாதங்களுக்கு முன் உரம் தட்டுப்பாடு இருந்தது. இப்போது உரம் வாங்க ஆள் இல்லை என்று அமைச்சர் சொல்கிறார். விவசாயத்திற்கு தண்ணீரும் கொடுப்பதில்லை, மின்சாரமும் கொடுப்பதில்லை.
நமது முதலமைச்சர் தற்போது டெல்லிக்கு சென்றாரே, ஏன்? நாட்டு மக்கள் பிரச்சனை குறித்துப் பேசவா சென்றார். அவரது பிரச்சனை பற்றி பேச மட்டுமே சென்றார்.
விவசாயிகளை நீங்கள் தேர்தலுக்காக மட்டும்தான் பயன்படுத்துவீர்களா? நாட்டில் விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் உயர்வு, மின்சார தட்டுப்பாடு வரும் என்று முன்கூட்டியே மக்களுக்கு தெரிந்திருந்தால் நிச்சயமாக இந்த அரசை தேர்ந்தெடுத்திருக்க மாட்டார்கள்.
மின்சாரத்துறை அமைச்சர் சில நாட்களுக்கு முன் நகர் பகுதிகளில் ஒரு மணி நேரமும், கிராமப்பகுதிகளில் 2 மணி நேரமும் மின்சாரம் தடைப்படும் என்றார். ஆனால் நகர் பகுதியில் 2 மணி நேரமும், கிராமப் பகுதியில் 4 மணி நேரத்திற்கும் மேல் மின்சாரம் தடைப்படுகிறது.
மக்களுக்கு மின்சாரம் தடையின்றி கொடுப்பதற்கு தானே அமைச்சராக உட்கார வைத்துள்ளோம். இவ்வாறு மின்சாரத்திற்கு விடுமுறை கொடுத்தால் எதற்காக அந்த பதவி?.
பவர் கட், பவர் கட் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இப்படியே போனால் மக்கள் உங்களின் பவரை ஆஃப் செய்து விடுவார்கள் என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications