திருச்சி ரயில் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு!
திருச்சி: முத்துநகர் எக்ஸ்பிரசில் பயணம் செய்த ரயில் டிக்கெட் கண்காணிப்பாளருக்கும், ரயில்வே போலீஸ் படையைச் சேர்ந்தவருக்கும் இடையே அடிதடி நடந்தது.
டிக்கெட் கண்காணிப்பாரை ரயில்வே போலீசார் அலுவலகத்தில் வைத்து விசாரித்தபோது அவரை விடுவிக்க முயன்ற ரயில்வே ஊழியர்களைக் கலைக்க ரயில்வே போலீசை படையைச் சேர்ந்தவர் துப்பாக்கியால் சுட்டார்.
சென்னை-தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார் ரயில்வே போலீஸ் படையைச் சேர்ந்த மணிமந்திரன்.
ரயில் விழுப்புரம்-விருத்தாச்சலம் இடையே சென்று கொண்டிருந்தபோது ஒரு பெட்டியில் தூங்கிக் கொண்டிருந்த ரகுராமன் என்ற ரயில்வே டிக்கெட் கண்காணிப்பாளரை எழுப்பி அடையாளம் கேட்டார்.
அவர், தான் ஒரு ரயில்வே கண்காணிப்பாளர் என்றும், லீவில் இருப்பதாகவும் கூறினார். இதையடுத்து அடையாள அட்டை கேட்கவே அதையும் காட்டினார்.
ஆனால், திருப்தியடையாத மணிமந்திரன் அவரை மேலும் குடையவே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியாக மாறியது.
இந் நிலையில் ரயில் திருச்சி ரயில் நிலையத்தை அடைந்தவுடன் ரகுராமனை இறக்கிய மணிமந்திரன், அவரை ரயில்வே போலீஸ் நிலையத்துக்குள் இழுத்துச் சென்றார்.
அங்குள்ள கேஷ் கார்ட் ரூமில் வைத்து அவரிடம் ரயில்வே போலீசார் விசாரணையில் இறங்கினர்.
இதையறிந்த ரயில்வே மஸ்தூர் யூனியன் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு விரைந்தனர். ரகுராமனுக்கு ஆதரவாக வாதாடிய அவர்களுக்கும் ரயில்வே போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது.
இதையடுத்து மணிமந்திரனை அவர்கள் தாக்க முயன்றனர். இதைத் தொடர்ந்து தனது துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டார் மணி. இதனால் சிதறி ஓடிய ரயில்வே ஊழியர்கள் மீண்டும் அங்கு வந்து மணியை தாக்க முயன்றனர்.
அவர் தப்பியோடியதையடுத்து கேஷ் கார்ட் அலுவலகத்தைத் தாக்கி சூறையாடினர்.
இச் சம்பவம் தொடர்பாக மணிமந்திரனும், ரகுராமனும் கண்டோன்மெண்ட் ரயில்வே காவல் நிலையத்தில் பரஸ்பரம் புகார் கொடுத்துள்ளனர்.
ரயில் நிலைத்தில் நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications