தீவிரவாத மிரட்டல்: தாஜ்மஹாலுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
ஆக்ரா: தீவிரவாத தாக்குதல் மிரட்டலைத் தொடர்ந்தும், 353வது ஷாஜஹான் உருஸ் விழாவை முன்னிட்டும் தாஜ்மஹாலுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. புகையிலை பொருட்கள், சிகரெட், தீப்பெட்டி ஆகியவற்றை தாஜ்மஹால் வளாகத்திற்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ் பெற்ற தாஜ்மஹாலை கட்டிய ஷாஜகானின் 353வது உருஸ் விழா தொடங்கியுள்ளது. இதன் நிறைவு விழா ஜூலை 31ம் தேதி முடிவடைகிறது. இந்த காலகட்டத்தில் பெருமளவிலான யாத்ரீகர்கள் தாஜ்மஹாலுக்கு வருவார்கள்.
தற்போது பெங்களூர், அகமதாபாத் நகரங்களில் தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளன. பல்வேறு நகரங்களில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உருஸ் விழா கமிட்டியினர் பல்வேறு கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளனர். அதன்படி எளிதில் தீப்பற்றக் கூடிய புகையிலை பொருட்கள், சிகரெட்டுகள், தீக்குச்சிகள் ஆகியவற்றை தாஜ்மஹாலுக்குள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, பேன்டுவாத்தியத்திற்கும் தாஜ்மஹாலுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்களுடன் வாத்திய குழுவினரை அழைத்து வரக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களைப் போலவே உ.பியிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்கனவே முடுக்கி விடப்பட்டுள்ளன. குறிப்பாக தாஜ்மஹால் அமைந்துள்ள ஆக்ராவிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications