எம்.பிக்களுக்கு லஞ்சம்: நாடாளுமன்ற குழு விசாரணை தொடக்கம்
டெல்லி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க, 3 பாஜக எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது தொடர்பான புகார் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற குழுவின் விசாரணை இன்று தொடங்குகிறது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மக்களவையில் கடந்த 22-ந் தேதி நம்பிக்கை வாக்கு கோரியது. அப்போது பாஜகவைச் ேசர்ந்த சேர்ந்த அசோக் அர்கால், பகன் சிங் குலஸ்தே, மகாவீர் பகோரா ஆகியோர் தங்கலுக்கு சமாஜ்வாடி கட்சி சார்பில் லஞ்சம் தரப்பட்டதாக கூறி ரூ. 1 கோடி பணத்தை லோக்சபாவில் வந்து கொட்டி பெரும் பரபரப்பை ஏர்படுத்தினர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாஜக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து மூத்த காங்கிரஸ் எம்.பி. கிஷோர் சந்திரதேவ் தலைமையிலான 7 எம்.பி.க்கள் கொண்ட குழுவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி அமைத்துள்ளார்.
இந்த குழுவில் பாஜகவைச் சேர்ந்த வி.கே.மல்கோத்ரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முகமது சலீம், சமாஜ்வாடி கட்சியின் ராம்கோபால் யாதவ், ராஷ்டிரிய ஜனதாதளத்தின் தேவேந்திர பிரசாத் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியின் ராஜேஷ் வர்மா மற்றும் திமுகவின் செ.குப்புசாமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழுவினர் புகார் கொடுத்த 3 எம்.பி.க்கள் மற்றும் லஞ்சம் கொடுக்கப்பட்டதை வீடியோ எடுத்ததாக கூறப்படும் தனியார் தொலைக்காட்சி குழுவினரிடம் இன்று விசாரணை நடத்துகின்றனர்.
மேலும் லஞ்சம் கைமாறியதை காட்டும் ஒரிஜினல் வீடியோ கேசட்டையும் பார்வையிட உள்ளனர்.












Click it and Unblock the Notifications