ரிசர்வ் வங்கிக்கு வந்த கள்ள நோட்டுக்கள்-விசாரணை
பெரம்பலூர்: பெரம்பலூர் வங்கியிலிருந்து ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பணத்தில் கள்ள நோட்டுக்கள் இருந்ததாக சென்னை ரிசர்வ் வங்கி மேலாளர் பெரம்பலூர் எஸ்பிக்கு புகார் அனுப்பியுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளது கனரா வங்கிக் கிளை. இந்த வங்கியில் தினசரி வரவு, செலவு சரிபார்த்த பின்பு வைப்புத் தொகை அதிகமாக இருக்கும் பட்சத்தில் வங்கியின் பணப் பாதுகாப்பு பெட்டகத்தில் அந்த பணம் வைக்கப்படும்.
மேலும் பாதுகாப்பு வசதி கருதி, பாதுகாப்பு பெட்டகத்திலிருந்து சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு பணம் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
சில வாரங்களுக்கு முன்பு வங்கியின் பணப் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பணத்தில் 100 ரூபாய் நோட்டுகளில் 48-ம், 500 ரூபாய் நோட்டுகளில் 27-ம் என மொத்தம் 18 ஆயிரத்து 300 ரூபாய்க்கு 75 - கள்ள நோட்டுகள் இருந்ததாக சென்னை ரிசர்வ் வங்கி மேலாளர் ராமச்சந்திரன் பெரம்பலூர் மாவட்ட எஸ்பி பிரேம் ஆனந்த் சின்ஹாவுக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.
புகாரின் பேரில், மாவட்ட எஸ்பி உத்தரவின் படி மாவட்ட குற்றபிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
கனரா வங்கி பண பாதுகாப்பு பெட்டகத்தில் கள்ள நோட்டு வந்தது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications