எக்ஸ்பிரஸ் பஸ் டிரைவர்களுக்கு 'ஓவர் டைம்' கட்!
சென்னை: தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சந்தித்து வரும் நஷ்டத்தை சமாளிக்கும் வகையில், சில கட்டுப்பாடுகளை அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி ஒரு டிரைவர் 8 மணி நேரம் மட்டுமே பஸ்ஸை ஓட்ட வேண்டும். ஓவர் டைம் எனப்படும் கூடுதல் பணி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒரு வேளை பார்த்தாலும் அதற்குரிய சம்பளத்தை வாங்க முடியாது.
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மூலம் 970 பஸ்கள் இயக்கப்படுகின்றன. தமிழ்நாடு தவிர, வெளி மாநிலங்களுக்கும் இந்த பஸ்கள் சென்று வருகின்றன.
நீண்ட தூரத்துக்கு விரைவு பஸ்கள் இயக்கப்படுவதால் ஒரு பஸ்சில் 2 டிரைவர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். டிரைவரே கண்டக்டர் பணியையும் செய்வார். பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்கும்போது மற்றொரு டிரைவர் பஸ் இயக்குவார்.
இதனால் அரசு விரைவு பஸ் டிரைவர்- கண்டக்டர்களுக்கு கூடுதலாக வேலை செய்யும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் படி (ஓவர் டைம்) வழங்கப்பட்டது. ஒவ்வொரு டிரைவரும் பணியில் இருந்து இறங்கும்போது ரூ.200 முதல் ரூ.400 வரை கூடுதலாக வேலை பார்த்த நேரத்திற்கு பணம் பெற்றனர்.
இது போக்குவரத்து கழகத்திற்கு பெரும் நஷ்டத்தை கொடுத்தது. ஏற்கனவே டீசல் விலை உயர்வு, தனியார் ஆம்னி பஸ்களின் பெருக்கத்தால் ஏற்பட்டுள்ள வசூல் குறைவால் விரைவு போக்குவரத்து கழகம் தொடர் நஷ்டத்தில் இயங்கும் நிலையில் டிரைவர்களுக்கு வழங்கும் கூடுதல் பணியால் செலவு அதிகரித்தது.
இதையடுத்து சில கட்டுப்பாடுகளை போக்குவரத்துக் கழகம் கொண்டு வந்துள்ளது. அதன்படி, ஓவர் டைம் படியை நிர்வாகம் கட் செய்தது. கூடுதல் பணி நேரத்திற்கு நிலையான ஒரு தொகையை வழங்குவதாக தெரிவித்தது. இதற்கு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஓ.டி.யை ஏற்கனவே உள்ளது போல வழங்க வேண்டும். ரத்து செய்யக் கூடாது என்று டிரைவர்கள் நேற்று மதுரை, கோவை நகரங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். பஸ்களை ஓட்டாமல் வேலை நிறுத்தம் செய்தனர்.
பின்னர் தற்காலிக டிரைவர்களை கொண்டு பஸ்களை இயக்கினார்கள். சென்னையிலும் இந்த பிரச்சினை ஏற்பட்டது. அண்ணா மற்றும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த 8 மணி நேரம் பணி முறையை போக்குவரத்து கழகம் கொண்டு வந்துள்ளது. நீண்ட தூரத்திற்கு செல்லும் பயண தூரத்தை கணக்கிட்டு முதல் பாதி தூரம் வரை ஒரு டிரைவர் ஓட்டி விட்டு இறங்கவும், அதன் பிறகு மற்றொரு டிரைவர் பணியில் தொடரும் பழைய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த முறையில் பஸ்களை இயக்கும்போது விபத்து ஏற்படுவது தவிர்க்கப்படுவதோடு கூடுதல் செலவும் குறையும் என்று அதிகாரிகள் நம்புகிறார்கள்.
அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் சுமார் 2400 டிரைவர்- கண்டர்கள் பணியாற்றுகிறார்கள். திடீரென எடுக்கப்பட்ட இந்த முடிவு ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இருப்பினும் போக்குவரத்துக் கழகம் சந்தித்து வரும் நஷ்டத்தை சமாளிக்க இப்படித்தான் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. இல்லாவிட்டால் நஷ்டம் தலைக்கு மேல் போய் விடும் என்கிறார்கள் போக்குவரத்து கழக அதிகாரிகள்.
என்னவாவது செய்து விட்டுப் போங்கள். உங்கள் பிரச்சினையில் பயணிகளை நடு வழியில் நிறுத்தி மட்டும் அலைய வைத்து விடாதீர்கள்












Click it and Unblock the Notifications