ஒகேனக்கல்-டெல்லி செல்லும் கர்நாடக குழு
பெங்களூர்: ஒகேனக்கல் விவகாரம் தொடர்பாக பிரதமரை சந்தித்துப் பேச அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவுடன் டெல்லி செல்ல இருப்பதாக கர்நாடக பாசனத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
ரூ. 1,334 கோடி செலவில் தமிழக அரசு திட்டமிட்டுள்ள ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் சட்ட விரோதமானது என்று கர்நாடக அரசு கூறி வருகிறது. இந்தத் திட்டத்தை எதிர்த்து கர்நாடகாவில் வன்முறை வெடித்ததில் தமிழர்கள் தாக்கப்பட்டனர்.
இந் நிலையில் தற்போது கர்நாடக சட்டசபை கூட்டத் தொடர் நடந்து வருகிறது.
இன்று கேள்வி நேரத்தின்போது, மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏ புட்டே கௌடா ஒகேனக்கல் பிரச்னையை எழுப்பினார்.
அதற்கு நீர்வளத் துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை பதிலளிக்கையில்,
இது குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி விவாதிக்கவுள்ளோம். அதைத் தொடர்ந்து அனைத்து கட்சி பிரதிநிதகள் கொண்ட குழுவை டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமரை சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்படும்.
சட்டசபை கூட்டத் தொடர் முடிந்ததும் அதற்கான ஏற்பாடு செய்யப்படும். கர்நாடகாவின் உரிமையை ஒருபோதும் இழக்க மாட்டோம்.
கர்நாடக மற்றும் தமிழக அதிகாரிகள் குழு 3 ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியி்ல் கூட்டாக ஆய்வு மேற்கொண்டனர். இது தொடர்பான கூட்டத்திற்கு தமிழக அதிகாரிகள் ஒரு முறைதான் வந்தனர் என்றார்.