குண்டு வெடிப்புச் சம்பவங்களுக்கு ஐ.எஸ்.ஐ.தான் காரணம்: பாஜக
டெல்லி: பெங்களூர், அகமதாபாத் நகரங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புதான் காரணம் என பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து பாஜக லோக்சபா துணைத் தலைவர் வி.கே.மல்ஹோத்ரா கூறுகையில், நாட்டில் இன்று நிலவும் வன்முறைச் செயல்களுக்கு ஐ.எஸ்.ஐ.தான் காரணம். பெங்களூர், அகமதாபாத் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் ஐ.எஸ்.ஐக்கு நேரடி தொடர்பு உள்ளது.
இப்போது சூரத்தில் தொடர்ந்து வெடிகுண்டுகள் சிக்கி வரும் சம்பவத்திலும் ஐ.எஸ்.ஐ.யின் சதி அடங்கியுள்ளது. இதன் மூலம் நாட்டில் அமைதியையும், சட்டம் ஒழுங்கையும், மத நல்லிணக்கத்தையும் கெடுக்க முயலுகிறது ஐஎஸ்ஐ.
காபூல் இந்திய தூதரகம் மீதான குண்டுவெடிப்புத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ தான் காரணம் என ஏற்கனவே ஆப்கானிஸ்தான் அரசு குற்றம் சாட்டியுள்ளது. அதிகரித்துள்ள தீவிரவாத செயல்களுக்கு ஐஎஸ்ஐதான் காரணம் என அமெரிக்காவும் ஒப்புக் கொண்டுள்ளதை நினைவில் கொள்ள வேண்டும்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சில கட்சிகள் தேச விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும், சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு அமைதியைக் குலைக்க முயல்வதாகவும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத்தே குற்றம் சாட்டியுள்ளார். இதை அரசு சீரியஸாக எடுத்துக் கொண்டு விசாரிக்க வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீவிரவாதத் தடுப்பு பிரிவை மத்திய அரசு உடனடியாக ஏற்படுத்த வேண்டும். தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பான விரிவான விசாரணைக்கு இது பெருமளவில் உதவும். அதேபோல பொடா சட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும்.
தீவிரவாதிகள் விஷயத்தில் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். பரஸ்பரம் குற்றம் சாட்டுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை. அனைவரும் ஒருங்கிணைந்து, ஒற்றுமையுடன் இருந்து தீவிரவாதிகளின் தீய நோக்கத்தை தோற்கடிக்க வேண்டும் என்றார் மல்ஹோத்ரா.












Click it and Unblock the Notifications