திருச்சி பயோ டெக் பேராசிரியருக்கு ரூ. 40 லட்சம் ஆய்வுதவி
திருச்சி: சோயா பீன்ஸின் சத்துணவு தரத்தை மேம்படுத்துவது தொடர்பான ஆய்வுக்காக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ஏ.கணபதிக்கு மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறையின் பயோ டெக்னாலஜி துறை ரூ. 40 லட்சம் நிதியுதவியை அளித்துள்ளது.
சோயா பீன்ஸில், 7 சதவீதத்திற்கும் குறைவான அளவில் 'ஆல்பா டோகோபெரால்' உள்ளது. இதை அதிகரிக்கும் வகையிலான ஆய்வுப் பணியில் பேராசிரியர் கணபதி ஈடுபட்டுள்ளார்.
அவரது ஆய்வுக்காக மத்திய அறிவியல்,தொழில்நுட்ப அமைச்சகத்தின் பயோ டெக்னாலஜி துறை, ரூ. 40 லட்சம் நிதியுதவியை அறிவித்துள்ளது.
இதுதவிர அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு கவுன்சில் ரூ. 20 லட்சம் நிதியுதவியை அளித்துள்ளது. திசு கல்ச்சர் மூலம் 'வித்தானியா சோம்னிபெரா'வின் உற்பத்தியைப் பெருக்குவது தொடர்பான முறையைக் கண்டுபிடிக்கும் ஆய்வுக்காக இந்த நிதியுதவி பேராசிரியர் கணபதிக்கு
வழங்கப்படுகிறது.
வித்தானியா சோம்னிபெரா (அஸ்வகந்தா) என்பது மருத்துவ பயன்பாடு கொண்ட தாவரமாகும். மன அழுத்தம், மலட்டுத்தனம், நோய் எதிர்ப்பின்மை, உடல் உறுதியின்மை ஆகியவற்றைப் போக்க இது பயன்படுகிறது. இது தொடர்பான மருந்து அஸ்வகந்தாவின் வேரிலிருந்து எடுக்கப்படுகிறது.
அஸ்வகந்தா, அருகி வரும் தாவர இனம். எனவே இதன் உற்பத்தியைப் பெருக்குவது தொடர்பான ஆய்விலும் பேராசிரியர் கணபதி ஈடுபட்டுள்ளார்.