போலீஸ் மீது குண்டு வீசிய ரவுடி - 3 பேர் கைது
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே தன்னைப் பிடிக்க முயன்ற போலீஸார் மீது ரவுடி ஒருவர் நாட்டு வெடிகுண்டை வீசினார். இதில் 3 போலீஸார் காயமடைந்தனர்.
கமுதியிலிருந்து சாயல்குடி செல்லும் சாலையில் சப் இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவருடன் தலைமைக்காவலர்கள் கென்னடி, ராஜபூபதி, சாந்தகுமார் உள்ளிட்டோர் இருந்தனர்.
அப்போது ஒரு மோட்டார் சைக்கிள் நம்பர் பிளேட் இல்லாமல் வேகமாக வந்தது. அவரை போலீஸார் நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த நபர் வேகமாக செல்ல முயன்றார்.
இதையடுத்து ஏட்டு ராஜபூபதி, அந்த நபரை மடக்கிப் பிடித்து நிறுத்த முயன்றார். இதனால் கோபமடைந்த பைக் வாலிபர், ராஜபூபதியை கத்தியால் குத்தினார். பின்னர் இடுப்பில் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை எடுத்து போலீஸார் மீது வீசினார். இதில் குண்டு பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இதில் ஏட்டுக்கள் 3 பேரும் படுகாயமடைந்தனர். இவர்களில் ராஜபூபதி உயிருக்கு ஆபத்தான நிலையில், கமுதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தப்பி ஓட முயன்ற பைக் நபரை எஸ்.ஐ. விஜயனும், மற்ற போலீஸாரும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தபோது அவரது பெயர் துரைப்பாண்டி என்றும், கமுதி அருகே உள்ள வேப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது.
இவர் கடந்த 2006ம் ஆண்டு சப் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் என்பவரை அபிராமம் அருகே வெட்டிக் கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்த வழக்கில் முதல் குற்றவாளி ஆவார். இதுதவிர ஏராளமான வழக்குகள் உள்ளன. அப்பகுதியில் பிரபல ரவுடி. ஜாமீனில் விடுதலையாகி வெளியே இருந்து வரும் துரைப்பாண்டி தற்போது போலீஸாரைக் கொல்ல முயன்ற வழக்கில் கைதாகியுள்ளார்.
எப்போதும் நாட்டு வெடிகுண்டு சகிதம்தான் துரைப்பாண்டி நடமாடுவாராம். இவரது கூட்டாளியான சப்பாணி என்கிற முருகன் கடந்த 24ம்தேதி ராமநாதபுரம் அருகே போலீஸார் மீது வெடிகுண்டு வீசிக் கொல்ல முயன்று கைதானார் என்பது குறிப்பிடத்தக்கது.
துரைப்பாண்டியைக் கைது செய்த போலீஸார் அவரிடமிருந்த ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர். வேறு யாரையாவது கொல்லும் நோக்குடன் பைக்கில் துரைப்பாண்டி சென்றாரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications