முன்னாள் கிரிக்கெட் வீரர் அசோக் மங்கட் மரணம்
டெல்லி: முன்னாள் இந்திய டெஸ்ட் வீரர் அசோக் வினூ மங்கட் மும்பையில் இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 61.
இந்தியாவுக்காக 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார் மங்கட். 6 அரை சதங்களை அடித்துள்ளார். நடுக்கள வீரராக விளையாடத் தொடங்கிய மங்கட், 1969ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். பின்னர் தொடக்க வீரராக ஜொலித்தார்.
1971ல் டெல்லியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் மங்கட் அடித்த 97 ரன்கள் இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்தது. இதன் மூலம் அந்தத் தொடரை சமண் செய்தது இந்தியா.
அஜீத் வடேகர் தலைமையிலான அணியில் மங்கட் இடம் பெற்றிருந்தபோது, 1971ம் ஆண்டு இந்தியா இங்கிலாந்து, மேற்குஇந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து முதலாவது டெஸ்ட் வெற்றிகளைப் பெற்றது.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் பயிற்சியாளராக சில காலம் செயல்பட்டார் மங்கட். அவரது தந்தை வினூ மங்கட்டும் டெஸ்ட் வீரர்தான். அவரது மகன்கள் ஹர்ஷ், மிஹிர் மங்கட் ஆகியோர் டென்னிஸ் வீரர்களாக உள்ளனர். இந்தியாவின் சார்பில் ஹர்ஷ் டேவிஸ் கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார்.
மங்கட் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், காலே டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இந்திய அணி வீரர்கள் கருப்புப் பட்டை அணிந்து மங்கட் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர்.