வேட்டையாடியவர்கள் மீது வனத்துறை சுப்பாக்கிச் சூடு
செங்கோட்டை: மேற்கு தொடர்ச்சி மலை காட்டுப்பகுதியில் வேட்டையாட முயன்றவர்கள் மீது வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஒருவருக்கு காயமேற்பட்டது.
கேரள மாநிலம் தென்மலை-ஆரியங்காவு இடைப்பட்ட பகுதியிலுள்ள அம்பநாடு வனப்பகுதி கேரள வனப்பகுதி ஆகும். இங்கு யானை, மிளா, மான் உள்பட பல்வேறு விலங்குகள் உள்ளன.
மேலும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சந்தன மரங்கள் உள்ளன. இங்குள்ள மூங்கில் கம்புகளை செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள சிலர் சட்ட விரோதமாக வெட்டி செல்வது வழக்கம்.
நேற்று இரவு இந்த வனப்பகுதியில் கேரள வனத்துறையினர் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சிலர் வேட்டையாடிக் கொண்டிருந்தனர். இதை பார்த்த வனத்துறையினர் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் மணி (25) என்பவர் காயமடைந்தார். விசாரணையில் அவர்கள் செங்கோட்டையை அடுத்த கற்குடியைச் சேர்ந்த மணி, மகேஷ், குட்டிராஜா, மாரியப்பன், இசக்கி துரை, சண்முகம், சுந்தர் ஆகியோர் வேட்டையில் ஈடுபட்டது தெரியவந்தது.
மணிக்கு இடுப்பில் குண்டடிப்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். தப்பியோடிய மற்றவர்களை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications