ராஜீவ்: உண்மையான சதிகாரர்கள் இன்னும் பிடிபடவில்லை-நளினி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முதலில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர் நளினி. பின்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மன்னிப்பால் அவரது தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
வேலூர் மகளிர் சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார் நளினி. சில மாதங்களுக்கு முன்பு அவரை சோனியா காந்தியின் மகள் பிரியங்கா நளினியை சிறைக்குச் சென்றுசந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ராஜீவ் காந்தி படுகொலைக்காக வருத்தம் தெரிவித்துள்ளார் நளினி. அதேசமயம், இந்த சதிச் செயலில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகள் இன்னும் பிடிபடாமல் சுதந்திரமாக உலவி வருவதாக அவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு தனது வக்கீல் இளங்கோவன் மூலம் நளினி பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ராஜீவ் காந்தி மிகச் சிறந்த தலைவர். அவரது படுகொலை நாட்டுக்கு பேரிழப்பாகும். ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதற்கு நான் வருத்தப்படுகிறேன்.
இருப்பினும் கொலைச் சதி தொடர்பான உண்மையான குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவரைக் கொன்றவர்களான சிவராஜன், சுபா, தனு ஆகியோர் இறந்து விட்டனர். கொலைச் சதித் திட்டத்தை தீட்டியவர்கள் இதுவரை கைது செய்யப்படவே இல்லை என்று கூறியுள்ளார் நளினி.
நளினியை சிறையில் சந்தித்த பிரியங்கா கூட பின்னர் அளித்த பேட்டியில், இந்த கொலைச் சதியில் உண்மையில் தொடர்புடையவர்கள் யார் என்பதை அறிந்து கொள்ளவே நளினியை சந்தித்ததாக தெரிவித்திருந்தார். இந்த பின்னணியில், உண்மையான சதிகாரர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று நளினி கூறியிருப்பது பரபரப்பை கூட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications