காழ்ப்புணர்ச்சியால் என் மீது பொய் புகார்: அமைச்சர் சுரேஷ்ராஜன்
சென்னை: அரசியில் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது பொய்யான புகார் கூறப்பட்டுள்ளது என்று சுற்றுலாத் துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாகர்கோயில் நகராட்சிக்குட்பட்ட 8வது வார்டில் அரசின் இலவச கலர் டிவி வழங்கும் விழா கடந்த 18.4.2008 அன்று நடந்தது.
அந்த நிகழ்ச்சியில் நடைபெறாத ஒரு சம்பவத்தை நடைபெற்றதாக மாவட்ட துணை ஆட்சியர் ஜெனார்தனன் என் மீது பொய் புகார் கூறியுள்ளார். அவர் கூறியது போல எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. இதுகுறித்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசு அதிகாரிகள், பொதுமக்களிடம் விசாரித்தாலே உண்மை தெரிந்துவிடும்.
இது, என் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட சுயநலவாதிகளின் சூழ்ச்சி என்றே கருதுகிறேன். கட்சியின் வளர்ச்சியைக் கண்டும், அரசுக்கு இருக்கின்ற நற் பெயரை களங்கப்படுத்தவும், வரும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து குறை கூறுவதற்கு எந்த பிரச்னையும் இல்லாததால் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு அதிமுகவினர் வேண்டுமென்றே பிரச்சனையை உருவாக்குகிறார்கள் என்று கூறியுள்ளார்.
அமைச்சர் சுரேஷ் ராஜன் அரசு அதிகாரியை ஜாதிப் பெயர் சொல்லித் திட்டியதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications