எங்களுக்கு மட்டுமே ஆளும் தகுதி உள்ளது - ராமதாஸ்

பாமகவின் 20ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நேற்று விழுப்புரத்தில் நடைபெற்றது. கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் செந்தமிழ் செல்வன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த இக் கூட்டத்தில் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் துரைமுருகன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசுகையில், வன்னியர்கள் எல்லா வகையிலும் திமுகவுக்கு உறுதுணையாக இருந்தவர்கள். தென் ஆற்காடு, வட ஆற்காடு, செங்கல்பட்டு திமுகவின் கோட்டையாக இருந்ததற்கு காரணம் அங்கிருந்த வன்னியர் தலைவர்களே. நாங்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மூவருக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி கொடுத்து இருக்கிறோம். ஆனால் திமுக வரலாற்றில் வன்னியருக்கு குறைந்தபட்சம் துணைப் பொதுச்செயலாளர் பதவியை
கொடுக்கக்கூடாதா?
1996ல் திமுக ஆட்சிக்கு வந்தபோது பு.த.இளங்கோவன், அருள்மொழி உள்பட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அதேபோல இப்போது குருவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்திருக்கிறார்கள்.
தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் செயலாளர்களில் வன்னியர் ஒருவரும் கிடையாது. முதன்மைச் செயலாளர்கள் நால்வரில் யாரும் வன்னியர் கிடையாது. இவ்வளவு பெரிய சமுதாயத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே வன்னியர். அவரும் 6 மாதங்களில் ஓய்வு பெற இருக்கிறார்.
தமிழ்நாட்டில் உள்ள 31 மாவட்டங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் தான் தனிநபர் வருமானம் மிகவும் குறைவு. கல்வி, குடிநீர் உட்பட அடிப்படை வசதிகளில் பின்தங்கிய மாவட்டமும் விழுப்புரம் மாவட்டம் தான்.
உள் ஒன்று வைத்து புறமொன்று பேசுவோர் உறவு இருந்தது. ஆனால் இப்போது இல்லை. நான் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவன் அல்ல. இளைஞர்களின் வளர்ச்சிக்கு, தொழில் வளர்ச்சிக்கு, வேளாண் வளர்ச்சிக்கு என்று தனி ஆவணம் தயாரித்துள்ளோம்.
வன்னிய மக்களுடைய, ஏழை விவசாயிகளுடைய வாழ் வாதாரங்களை பிடுங்கிக்கொண்டு அவர்களை நிலமற்றவர்களாக, அனாதைகளாக ஆக்கும் எந்த திட்டத்தையும் இந்த ராமதாஸ் உயிரோடு இருக்கும்வரை நிறைவேற்ற முடியாது என்று தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்.
விவசாய விளை நிலங்களில் கைவைத்தால் ராமதாஸ் சும்மா இருக்க மாட்டான். அதனுடைய விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்று தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்.
2020ல் எப்படி தமிழகம் என்று உதகை பிரகடனம் அறிவித்த போது 2011ல் பாமக ஆட்சி என்று 8 முறை முதல்வர் கருணாநிதி கிண்டல் செய்து எந்த குறையை சொன்னாலும், உங்கள் (பாமக) ஆட்சியில் நிறை வேற்றிக்கொள்ளுங்கள் என்றார்.
உங்கள் (கருணாநிதி) வாக்கு பலிக்கும். தலைகீழாக உள்ள தமிழக சமூக பொருளாதார நிலையை மாற்றி யமைப்போம். இனி முதல்வராக மாட்டேன் என்று கூறியிருக்கிறீர்கள். உண்மைதான். மக்கள் உங்கள் கட்சியையும், உங்களையும் இனி ஏற்க மாட்டார்கள். தமிழ்நாட்டை ஆள எங்களுக்கு தகுதி இல்லை என்றால் வேறு யாருக்கு தகுதி உள்ளது? என்றார் ராமதாஸ்












Click it and Unblock the Notifications