கொல்கத்தாவில் குண்டுவெடிப்பு: 4 பேர் பலி - சதியா?
கொல்கத்தா: கொல்கத்தாவில் குப்பை மேட்டில் கிடந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் நான்கு பேர் உடல்சிதறி பலியானார்கள். இதனால் கொல்கத்தா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அகமதாபாத், பெங்களூர் தொடர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து சூரத் நகரில் 23 வெடிக்காத வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. தலைநகர் டெல்லி உள்பட பல்வேறு நகரங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்களும் விடுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து நாடு முழுவதும் காவல்துறையினர் உஷார் நிலையில் உள்ளனர்.
இந்த நிலையில், கொல்கத்தாவில் நாட்டு வெடிகுண்டு வெடித்து நான்கு பேர் பலியானார்கள். ஆனால் இது சதிச் செயலல்ல, தற்செயலான விபத்து என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கொல்கத்தாவின் சித்பூர் பகுதி குடிசைகள் நிறைந்த பகுதியாகும்.இங்குள்ள ஒரு குப்பை கொட்டும் இடத்தில், காகிதம் பொறுக்கும் தொழிலாளர்கள் சிலர் ஏதாவது பொருட்கள் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது நாட்டு வெடிகுண்டு ஒன்று அவர்களிடம் கிடைத்தது. அது வெடிகுண்டு என்று அறியாத அவர்கள் அது என்ன என்று பிரித்துப் பார்க்க முயன்றனர். அப்போது பலத்த சப்தத்துடன் அது வெடித்துச் சிதறியது.
இதில் திதர் மொல்லா, ரஞ்சன் மொல்லா, ஹசன் சர்தார் மற்றும் 3 வயது குழந்தை சாஹித் சேனா ஆகியோர் உடல் சிதறி பலியானார்கள். 9 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் விரைந்து வந்து நான்கு பேரின் உடல்களையும் மீட்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது தற் செயலான விபத்துதான், தீவிரவாத செயலாக இருக்க முடியாது என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தீவிரஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து விசாரணையும் முடுக்கி விடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தாவில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications