காஷ்மீர் கவர்னரை நீக்க பூரி சங்கராச்சாரியார் கோரிக்கை
கவுஹாத்தி: காஷ்மீர் கவர்னர் நரேந்தர் நாத் வோராவை நீக்க வேண்டும் என்று பூரி சங்கராச்சாரிய ஸ்வாமி அதோக்ஸ் ஜனானந்த தேவ்தீர்த் கூறியுள்ளார்.
அமர்நாத் கோயிலுக்கு யாத்திரை செல்லும் பக்தர்கள் தங்குவதற்கு குடில் அமைப்பதற்காக காஷ்மீர் மாநில அரசு 40 ஏக்கர் நிலத்தை வழங்கியது. அதற்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து கடந்த ஜூலை மாதம் 1ம் தேதி அந்த உத்தரவை அரசு திரும்பப் பெற்றது.
இதனால் அங்கு கடந்த ஒரு மாதமாக கலவரம் நடந்து வருகிறது. பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் வடகிழக்கு பகுதிகளில் புனித யாத்திரை சென்று திரும்பிய பூரி சங்கராச்சாரிய ஸ்வாமி அதோக்ஸ் ஜனானந்த தேவ்தீர்த் அம்மாநில நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:
காஷ்மீர் மாநில கவர்னர் என்.என்.வோரா ஏதோ உள்நோக்கத்துடன் செயல்படுவதாக தோன்றுகிறது. அமைதியின் இருப்பிடமாக இருந்த காஷ்மீர் இன்று கலவர பூமியாக மாறியுள்ளது.
சட்டத்தை தாங்களே கையாளும் அளவுக்கு மக்களை தூண்டிவிட்டு வேலை பார்க்கிறார் வோரா. தவிர அம்மாநிலத்தில் உள்ள மூத்த பத்திரிகையாளர்களை கைது செய்யவும், வெளிநாட்டு பத்திரிகையாளர்களை விரட்டவும் அவர் திட்டமிட்டுள்ளதாக அறிகிறேன். இதனால் அவரை நீக்க வேண்டும்.
அமர்நாத் கோயிலுக்கு நிலம் வழங்குவது தொடர்பாக மக்களுடன் அரசு பேசி சுமூக முடிவை எடுக்க வேண்டும். மக்களும் அதைத்தான் விரும்புகின்றனர். ஆனால் தேவையற்ற பேச்சுகளால் அங்கு கலவரம் மூண்டுள்ளது.
அங்கு பெரும்பான்மை பெற்ற அரசும் இல்லாததால், நிலைமை மோசமாகிவிட்டது. ஒற்றுமையை குலைக்க வேண்டும் என்று சில விஷமிகள் அங்கு வதந்தி பரப்புகின்றனர். இதனால் அங்கு மதமோதல் வெடிக்குமோ என்று அச்சமாக உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications