சூரத் சிவில் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்
சூரத்: சூரத்தில் உள்ள சிவில் மருத்துவமனை வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
குஜராத் மாநிலம் சூரத் நகரில் கடந்த சில நாட்களில் இதுவரை மொத்தம் 28 வெடிக்காத வெடிகுண்டுகள் கண்டுபிடித்து செயலிழக்க வைக்கப்பட்டுள்ளன. இங்கு வைக்கப்பட்ட குண்டுகள் அனைத்தும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெடிக்காமல் போய் விட்டன.
அடுத்தடுத்து குண்டுகள் சிக்கி வருவதால் சூரத் நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பின் கீழ் உள்ளது.
இந்த நிலையில் சூரத்தில் உள்ள சிவில் மருத்துவமனை கண்காணிப்பாளருக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று வந்த அக்கடிதத்தில், மருத்துவமனை வளாகத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து போலீஸார் வரவழைக்கப்பட்டனர். மருத்துவமனை வளாகத்தில் சுமார் நான்கு மணி நேரம் தீவிர சோதனை நடத்தினர். இருப்பினும் எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை.
வெடிகுண்டு மிரட்டலால், மருத்துவமனையில் இருந்த 5000க்கும் மேற்பட்ட நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் பீதியில் மூழ்கியிருந்தனர். ஆனால் குண்டு எதுவும் இல்ைல என்று தெரிவிக்கப்பட்ட பின்னரே அவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
அகமதாபாத் நகரில் உள்ள சிவில் மருத்துவமனையில் கடந்த 26ம் தேதி குண்டுவெடித்தது என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications