ஹர்கிஷன் சிங் சுர்ஜீத்தின் உடல் தகனம் செய்யப்பட்டது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான ஹர்கிஷன் சிங் சுர்ஜித் கடந்த வெள்ளிக்கிழமை மரணமடைந்தார். அவரது உடல் தகனம் நேற்று மாலை டெல்லி நிகம்போத் மயானத்தில் நடைபெற்றது.
முழு அரசு மரியாதைகளுடன் உடல் தகனம் நடைபெற்றது. உடல் தகனம் செய்யப்படுவதற்கு முன்பு டெல்லி போலீஸார் வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டனர்.
நேற்று காலையில் சுர்ஜித்தின் உடல் சிபிஎம் தலைமையகத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அஞ்சலி செலுத்தினார்.
சுர்ஜித்தின் உடலுக்கு அருகே பிரகாஷ் காரத், சீதாராம் எச்சூரி, எஸ்.ஆர். பிள்ளை, பிருந்தா காரத் உள்ளிட்டோர் சோகத்துடன் நின்றிருந்தனர்.
சுர்ஜித்தின் மனைவி பிரீத்தம் கெளர், அவரது இரு மகன்களான குருசேத்தன், பரம்ஜீத் ஆகியோரும் உடன் இருந்தனர்.
முன்னாள் பிரதமர்கள் தேவெ கெளடா, ஐ.கே.குஜ்ரால், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர்கள் ஏ.கே.அந்தோணி, லாலு பிரசாத் யாதவ், ராம் விலாஸ் பாஸ்வான், வயலார் ரவி, எம்.எஸ்.கில், டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, வி.கே.மல்ஹோத்ரா, சமாஜ்வாடி தலைவர்கள் முலாயம் சிங் யாதவ், அமர்சிங், அகாலிதள தலைவர் எஸ்.எஸ்.பாதல், இடதுசாரி தலைவர்கள் ராஜா, அபான் ராய், தெலுங்கானா ராஷ்டிரிய சமித தலைவர் சந்திரசேகர ராவ் உள்ளிட்டோர் சுர்ஜித்துக்கு அஞ்சலி செலுத்தினர்.
சீனா, கியூபா, ஈரான், வியட்நாம், வட கொரியா, நேபாளத்திலிருந்து கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகளும் வந்திருந்து சுர்ஜித்துக்கு அஞ்சலி செலுத்தினர்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, முதல்வர் கருணாநிதி, உ.பி. முதல்வர் மாயாவதி ஆகியோரது சார்பில் மலர் வளையங்கள் வைக்கப்பட்டன.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் மாலையில் சுர்ஜீத்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. மயானத்தை அடைந்ததும் அங்கு சீக்கிய மத முறைப்படி இறுதிச் சடங்குகள் நடந்தன.












Click it and Unblock the Notifications