குசேலனை எதிர்த்து திராவிட பறையர் கழகம் போராட்டம்
சென்னை: குசேலன் படம் திரையிடப்படுவதை எதிர்த்து சென்னையில் அப்படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்கள் முன்பு திராவிடப் பறையர் கழகம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
ஓகனேக்கல் குடிநீர்ப் பிரச்சினை தொடர்பாக சென்னையில் திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தின்போது தான் பேசியதற்காக கன்னடர்களிடம் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்தார். இது தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
ரஜினிகாந்த் கன்னடர்களிடம் வருத்தம் தெரிவித்தது, தமிழகத்திற்கு எதிராக உள்ளது. எனவே அவர் நடித்த குசேலன் படத்தை தமிழ்நாட்டில் திரையிடக் கூடாது என்று திராவிட பறையர் முன்னேற்ற கழகம் கூறி இருந்தது.
நேற்று அந்த கழகத்தின் பொதுச்செயலாளர் ரா.கோ.ராசசேகர் தலைமையில் குசேலன் படம் திரையிடப்பட்டு உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை ஐநாக்ஸ் மல்டிப்ளக்ஸ் தியேட்டரை முற்றுகையிட வந்தனர்.
கைகளில் கொடியுடன் வந்த அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது ரஜினிகாந்த்தை கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர். இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
இதேபோல திருவான்மியூர் தியாகராஜா தியேட்டர் முன்பும் திராவிடர் பறையர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் செய்தவர்களை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications