வெட்கப்படுவதை தவிர வேறு வழியில்லை-ராமதாஸ்
சென்னை: மண்ணைக் காப்பாற்ற முடியவில்லை. மொழியைக் காப்பாற்ற முடியவில்லை. மீனவர்கள் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. இதற்காக நாம் வெட்கப்படுவதைத் தவிர வேறு வழியில்லை என்று பாமக நிறுநனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
நாத்திகம் பத்திரிகையின் 50-ம் ஆண்டு விழா குருவிக்கரம்பை வேலு தலைமையில் நடந்தது. நாத்திகம் பி.ராமசாமி வரவேற்றார்.
விழாவில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசுகையில், நாம் மண்ணை இழந்தோம், ஆறுகளின் உரிமைகளை இழந்தோம், கொள்கைகளை, மொழியை, பண்பாட்டை இழந்து வருகிறோம் என்றெல்லாம் இங்கே பேசியவர்கள் கூறினார்கள்.
இளைஞர்கள் தறிகெட்டுப் போயிருக்கிறார்கள். சாராயக்கடைகளிலும், திரையரங்குகளிலும் தான் இளைஞர்களை பார்க்க முடிகிறது. அவர்களுக்கு மொழி, நாடு, இனம், பண்பாட்டை பற்றி சொல்லக்கூடிய தலைவர்கள் இல்லை. சொன்னாலும் புரிந்து கொள்ளக்கூடிய நிலையில் அவர்களும் இல்லை. இந்த நிலை நீடித்தால் முந்தைய தலைவர்கள் பாடுபட்டது எல்லாம் வீணாகப் போய்விடும்.
அடுத்த தலைமுறையில் குடிக்காத இளைஞர்களே இருக்க முடியாது என்று ஒரு ஆய்வு கூறுகிறது. 12 மணி சினிமா காட்சிக்கு காலை 8 மணிக்கே திரையரங்குகளில் கூடி நிற்கிறார்கள். இதையெல்லாம் தடுக்க தரமான, கட்டாய, சமச்சீர் கல்வி, தமிழ் வழி கல்வி வழங்க வேண்டும். மதுவை ஒழிக்க வேண்டும்.
பயிற்று மொழி, ஆட்சி மொழி சிறுக சிறுக மாறி வருகிறது. சிற்றூர்களில் கூட ஆங்கில வழி கல்வி இருப்பதை பார்க்கிறோம். எங்கும் தமிழ் இல்லை. அறிவார்ந்த தமிழ் சமுதாயத்தை, இளைஞர்களை உருவாக்க வேண்டும் என்றால் சமச்சீர் கல்வி கொடுத்து, மதுவை ஒழித்தால் தான் முடியும். இதை மாற்றாமல் விமோசனம் இல்லை.
தமிழ்நாட்டில் இருக்கிற விளை நிலம், விளையாத நிலம் எல்லாவற்றையும் பக்கத்து மாநிலத்தவர், வட மாநிலத்தவர்கள் 100 ஏக்கர், 50 ஏக்கர் என்று வாங்கி கொண்டிருக்கிறார்கள். சென்னையில் இருந்து கடலூர் வரை வந்துவிட்டனர். இந்த நிலையை மாற்ற நாம் என்ன செய்யப் போகிறோம், இதற்கு என்ன வழி என்று தலைவர்கள் யோசிக்க வேண்டும்.
மொழியை காப்பாற்ற முடியவில்லை, மண்ணை காப்பாற்ற முடியவில்லை, மீனவர் உயிரைக் கூட காப்பாற்ற முடியவில்லை. இதற்காக நாம் வெட்கப்படுவதைத் தவிர வேறு வழியில்லை. அதற்கு வழி காண வேண்டியது இந்த மேடையில் உள்ள தலைவர்கள் தான். அந்த வழியில் நாங்கள் நடப்போம்.
மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று பேசப்படுகிறது. ஆனால் இன்னும் ஒரு பள்ளிக்கூடம் தொடங்கவும், மருத்துவமனை தொடங்கவும் கூட டெல்லிக்கு போக வேண்டும் என்றார் ராமதாஸ்.
நல்லகண்ணு, பழ.நெடுமாறன், தொல். திருமாவளவன் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினர்.












Click it and Unblock the Notifications