ரஜினி வீடு முற்றுகையா?-இந்துமுன்னணி கண்டனம்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து அண்மையில் திரையிடப்பட்ட குசேலன் படத்துக்கு அரசியல் காரணங்களுக்காக சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
ரஜினிகாந்த் தான் பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்ததை கண்டித்து ரஜினி படம் ஓடும் தியேட்டர்களை மற்றும் அவருடைய வீட்டை முற்றுகையிடப் போவதாக இளைஞர் காங்கிரஸ் மற்றும் சில அமைப்புகள் அறிவித்திருக்கிறார்கள்.
ஓகேனக்கல் பிரச்சனையில் முதலமைச்சர் கருணாநிதி, கர்நாடகாவில் தேர்தல் முடிந்த பிறகு பேசலாம் என்று அறிவித்திருந்தார். தேர்தல் முடிந்து, புதிய ஆட்சி அமைத்து பல மாதங்கள் ஆகியும் இது குறித்து கருணாநிதி வாய் திறவாமல் மௌனம் சாதிப்பது ஏன்?.
தமிழர்களின் நலனுக்காக வீட்டை முற்றுகையிடுவதாக இருந்தால் காங்கிரசார் முதலில் கருணாநிதியின் வீட்டைத் தானே முற்றுகையிட வேண்டும்.
அதை விட்டு விட்டு ஆவடிக்கு வரும் முதலமைச்சருக்கு காவடி தூக்கிகளான காங்கிரசார் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப் போவதாக அறிவித்திருப்பது வெட்கக் கேடு மட்டுமல்ல, ஏமாற்று வித்தையும் ஆகும்.
திருமாவளவன் பிறந்த நாளான ஆகஸ்ட் 17ஐ தமிழர் எழுச்சி நாளாக நடத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் வெளிநாட்டவர்களான சேகுவேரா, தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் ஆகியோர் படங்களை எல்லாம் போட்டு தங்களுடைய எல்லை கடந்த தேசபக்தியை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார்கள்.
இதை எல்லாம் கண்டிக்க வக்கற்ற காங்கிரஸ் ரஜினிகாந்தை சாடுவது வெட்கக் கேடு, ராஜீவ் காந்தி கொலை சரிதான் என்று இவர்கள் ஒப்புக் கொள்வது போல இது அமைத்திருக்கிறது.
விடுதலை சிறுத்தைகளைச் சேர்ந்த வன்னி அரசு என்பவர் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கடத்த உதவியதாகப் பிடிபட்டு, கைது செய்யப்பட்ட உடனே விசாரணை ஏதுமின்றி அரசு ஆதரவுடன் ஜாமீனில் வெளி வந்துவிட்டார்.
இப்போது, தமிழக அரசு இந்த விளம்பரத்தையாவது தடை செய்ய வேண்டும் என்று தேசபக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள். தங்கபாலு, இளங்கோவன், வாசன் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் கட்சிக்காரர்கள் ஜனநாயக விரோதமாகச் செயல்படுவதை கண்டிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாமா? என்று கேட்டுள்ளார் ராம கோபாலன்.












Click it and Unblock the Notifications