ஆக.15: தமிழகத்துக்கு 'ஐபி' மீண்டும் எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாகவும், பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும்படியும் மத்திய உளவுத் துறை மீண்டும் எச்சரித்துள்ளது.
பெங்களூர், அகமதாபாத் தொடர் வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து மத்திய உளவுத்துறை அனைத்து மாநிலங்களையும் எச்சரித்து வருகிறது.
இந்நிலையில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி போன்ற முக்கிய மாநிலங்களுக்கு மத்திய உளவுத்துறை மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தீவிரவாதிகள் நாடு முழுவதும் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியுள்ளதாகவும் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும்படியும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுதந்திரத்தின கொண்டாட்டம் நடக்கும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும். பஸ் மற்றும் ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு இருக்க வேண்டும் என்று மத்திய உளவுத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதையடுத்து காஷ்மீர் தீவிரவாத குழுக்கள் மற்றும் அவர்களது ஆதரவு குழுக்கள் தமிழகத்தில் பதுங்கியுள்ளார்களா என்று போலீசார் தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர். மாநிலம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும்படி மாவட்ட எஸ்பிக்களுக்கு தமிழக உளவுத் துறை தகவல் அறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், சந்தேகத்துக்குரிய நபர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். வர்த்தகர்களை அழைத்து கூட்டம் போட வேண்டும். பொது இடங்களில் கேட்பாரற்றுக் கிடக்கும் பொருட்கள் கிடந்தால் அதை யாரும் தொடக்கூடாது என்று ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை செய்ய வேண்டும். தனியார் நிறுவனங்களுக்கும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications