'நளினி'-பதில் தாக்கல் செய்ய மத்திய-மாநில அரசுகளுக்கு உத்தரவு
சென்னை: தன்னை விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்துள்ள மனுவுக்கு வரும் 11ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கடந்த 17 ஆண்டுகளாக வேலூர் சிறையில் இருக்கும் நளினி தன்னை விடுவிக்கக் கோரி கடந்த 2006ம் ஆண்டிலும், சில மாதங்களுக்கு முன்பும் இரு மனுக்களை தாக்கல் செய்தார்.
இந்த இரு மனுக்களையும் நீதிபதி நாகமுத்து விசாரித்து வருகிறார். இன்று இந்த மனுக்கள் மீது இறுதி விசாரணை நடந்தது. அப்போது இதற்கு பதில் மனு தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள் அவகாசம் கோரினர்.
இதையடுத்து 11ம் தேதி வரை அவகாசம் தந்த நீதிபதி, அன்று இந்த வழக்கில் இறுதி விசாரணை நடக்கும் என அறிவித்தார்.
இந்த வழக்கில் நளினியின் விடுதலையை எதிர்த்து ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது நினைவுகூறத்தக்கது.
இந்தக் கொலை வழக்கில் முன்னதாக நளினிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் கருணை மனு தாக்கல் செய்து ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications