'ஓவர் டைம்' கட்-அரசு பஸ் டிரைவர்கள் போராட்டம்
சென்னை: ஓவர்டைம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து அரசுப் போக்குவரத்து கழக டிரைவகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அரசு விரைவு பஸ் டிரைவர்களுக்கு வழங்கப்பட்ட ஓவர் டைம் பணி ரத்து செய்யப்பட்டதால் இதுவரை கிடைத்து வந்த கூடுதல் படி கிடைக்காமல் போனது. எந்த இடத்தில் பணி முடிகிறதோ அங்கிருந்து வேறு டிரைவர் மூலம் பஸ்சை இயக்க நிர்வாகம் முடிவு செய்தது.
டிரைவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓவர் டைமால் விரைவு போக்குவரத்து கழகத்திற்கு கூடுதல் செலவு ஏற்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு பஸ் டிரைவர்களில் ஒரு பிரிவினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணா நகர் பஸ் டிப்போவில் இருந்து டிரைவர்கள் பஸ்களை எடுக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரு தினங்களுக்கு முன் தொடங்கிய போராட்டம் நேற்று மாலை வரை நீடித்தது. இதனால் டிப்போவில் இருந்து 40 பஸ்கள் வெளியே எடுக்கப்படவில்லை.
இதனால் மன்னார்குடி, நாமக்கல், பட்டுக்கோட்டை, துறையூர், அதிராம்பட்டினம், பெங்களூர் பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பஸ்கள் இயக்கப்படவில்லை. சென்னையில் மட்டும் 44 விரைவு பஸ்கள் ஓடவில்லை என்று கூறப்படுகிறது.
அதே போல மதுரையில் 45 பஸ்களும், கோவையில் 16 பஸ்களும் இயக்கப்படவில்லை. 89 சதவிகித பஸ்கள் மட்டுமே ஓடின. 11 சதவிகித பஸ்கள் ஓடவில்லை.
இதைத் தொடர்ந்து அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் தியாகராஜன், தொழிற்சங்கத்தினருடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால், இது குறித்து தியாகராஜன் கூறுகையில், டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை. எல்லா பஸ்களும் முழுமையாக இயக்கப்பட்டன. எந்த பஸ்களும் நிறுத்தப்படவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications