ராஜா மீதான புகாருக்கு முகாந்திரம் உள்ளது: கருணாநிதி

கைத்தறித்துறை அமைச்சராக இருந்த என்.கே.கே.பி. ராஜா மீது ஈரோட்டைச் சேர்ந்த பழனிச்சாமி - மலர்விழி தம்பதி மற்றும் அவர்களது மகன் சிவபாலன் ஆகியோரை கடத்தி மிரட்டி சித்திரவதை செய்து சொத்தைப் பறிக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவும் பதிவாகியுள்ளது.
இந்த சர்ச்சையைத் தொடர்ந்து நேற்று ராஜா அதிரடியாக நீக்கப்பட்டார். இந்த நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்து முதல்வர் கருணாநிதி நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
அதில் முதல்வர் கூறியிருப்பதாவது:
கடந்த சில நாட்களாக சில பத்திரிக்கைகளில் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், சுரேஷ் ராஜன், தா.மோ. அன்பரசன், என்.கே.கே.பி. ராஜா ஆகியோர் மீது வந்துள்ள செய்திகள் குறித்து உரிய அதிகாரிகளைக் கொண்டு விசாரித்தேன்.
ஒரு கொலை வழக்கில்குற்றம் சாட்டப்பட்டு காவல் துறையினரால் தேடப்படும் குமார் என்பவருக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பாதுகாப்பு அளித்திருப்பதாக வந்துள்ள செய்தி தவறு என்றும், குமார் கைது செய்யப்படுவதற்கு அந்த அமைச்சர் இடையூறாக இல்லை என்றும் தெளிவாகத் தெரிகிறது.
சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ் ராஜன் மீது தொடரப்பட்டுள்ள வன்கொடுமை தடுப்பு வழக்கில் எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை என்றும், சுரேஷ் ராஜன் இளமைக்காலம் முதல் திராவிட இயக்கத்திலே ஈடுபாடு கொண்டவர் என்ற காரணத்தால்அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டை நம்புவதற்கில்லை என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வேளாண்மைத் துறை அமைச்சர்வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது குற்றம் சாட்டி, தொடரப்பட்டுள்ள வழக்கில் நீதிமன்றத்தின் ஆணையின்படி போலீஸார் விசாரித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை அனுப்பியிருக்கிறார்கள்.
இந்த அறிக்கையைப் பற்றி விசாரித்ததன் பேரில் வீரபாண்டி ஆறுமுகம் பற்றிய புகாருக்கு எந்தவிதமான முகாந்திரமும் இல்ைல என்று தெளிவாகிறது.
கைத்தறித்துறை அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா மீது பழனிச்சாமி, மலர்விழி, சிவபாலன் ஆகியோரை கடத்திச் சென்று விட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் அவர்களே நீதிமன்றத்திற்கு முன்பு ஆஜராகியதுடன், அவர்களின் மகன் சிவபாலன் தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
இதுபற்றி நடத்திய விசாரணையில், அமைச்சர் ராஜாவின் தூண்டுதலின் பேரில் அதிமுக தொழிற்சங்கச் செயலாளர் சம்பத்குமார், சுந்தர்ராஜன் ஆகியோர் வன்முறையைப் பயன்படுத்தி நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி செய்ததாக அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இதனையும் விசாரித்த வரையில், இவர் மீதுள்ள புகாருக்கு முகாந்திரம் இருப்பதை அறிந்து உயர்நீதிமன்றத்தில், தீர்ப்பு வரும் வரையில், அமைச்சர் பதவியிலிருந்து ராஜா விடுவிக்கப்படுகிறார் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.












Click it and Unblock the Notifications