மாதம்தோறும் பெட்ரோல் விலையை உயர்த்தப் பரிந்துரை!!
டெல்லி: பெட்ரோல், டீசல் விலையை மாதந்தோறும் சிறிதளவு உயர்த்தலாம் என மத்திய அரசுக்கு சதுர்வேதி கமிட்டி பரிந்துரைத்துள்ளது.
ஒரு பக்கம் கச்சா எண்ணெயின் விலை குறைந்து கொண்டே வந்தாலும், இந்திய பெட்ரோலிய நிறுவனங்களின் நஷ்டப் புலம்பல் மட்டும் நின்றபாடில்லை.
ஏற்கனவே இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தலைவர், நாங்கள் நஷ்டத்தில் வியாபாரம் செய்யவா வந்தோம்... என்று கடுமையாகப் பேசிவிட்டார்.
இன்னொரு பக்கம் இந்த விலை உயர்வுக்கு ஒரு வகையில் காரணமாக இருக்கும் (பாதிக்கும் மேல் உள்ளூர் வரிகள்தான்!) மாநில அரசுகளோ, இந்த விலை உயர்வுக்கும் தமக்கும் சம்பந்தமே இல்லாதது போல் மௌனம் சாதிக்கின்றன.
தொடர்ந்து பெட்ரோல்-டீஸல் விலை உயர்த்தப்பட வேண்டும் என மத்திய அரசின் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை அரசை வற்புறுத்தி வருகின்றன.
ஆனால் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தினால் நாட்டில் பண வீக்கம் மேலும் அதிகரிக்கும் என்று கூறி தாமதப்படுத்தி வருகிறது மத்திய அரசு.
இதனால் அந்த எண்ணை நிறுவனங்களுக்கு இதுவரை இல்லாத அளவாக 2 லட்சத்து 46 ஆயிரத்து 600 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிதி ஆண்டில் மட்டும் எண்ணை நிறுவனங்களுக்கு 2 கோடியே 5 லட்சத்து 740 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
நஷ்டம் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 11 ரூபாய் 60 காசுகளும், டீசல் விலையை லிட்டருக்கு 23 ரூபாய் 23 காசுகளும், 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு விலையை சிலிண்டருக்கு 348 ரூபாய் 89 காசுகளும், மண் எண்ணை விலையை லிட்டருக்கு 39 ரூபாய் 55 காசுகளும் உயர்த்த வேண்டியது அவசியம் என எண்ணை நிறுவனங்கள் கூறிவிட்டன.
இந்த இழப்பை எப்படி சரிக் கட்டலாம்? என்று ஆய்வு செய்யவும், அரசுக்கு யோசனை கூறவும் பிரதமர் மன்மோகன்சிங் ஒரு கமிட்டியை நியமித்தார். மத்திய அமைச்சரவை முன்னாள் செயலாளரும், திட்டக்குழு உறுப்பினருமான பி.கே.சதுர்வேதி தலைமையில் அமைக்கப்பட்ட இந்த கமிட்டி சில நாட்களுக்கு முன்னர் தனது அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளித்தது.
அந்த அறிக்கையில், எண்ணை நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், உற்பத்தி செலவுக்கு சமமான விலையை எட்டும்வரை, பெட்ரோல் டீசல், மண்ணெண்ணை மற்றும் சமையல் எரிவாயு விலைகளை மாதந்தோறும் சிறிதளவு உயர்த்தலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
1999- ம் ஆண்டுக்கு முன்னதாக எண்ணை உற்பத்தி செய்யும் வயல்களுக்கு விதிக்கப்பட்டது போல சூப்பர் லாப வரி விதிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையைப் பெற்றுக் கொண்ட பிரதமர் இப்போதைக்கு எந்த முடிவும் மேற்கொள்ளப் போவதில்லை என்றும், சர்வதேச மார்க்கெட்டில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு மேலும் 20 டாலர்கள் வரை குறையும் என எதிர்பார்ப்பதால், பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்றும் முடிவெடுத்துள்ளதாக பிரதமர் அலுவல வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications