கணக்கெடுப்பு குளறுபடி: பேரையூருக்கு ரூ.40 லட்சம் இழப்பு!
கமுதி: அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக பேரையூர் ஊராட்சிக்கு சுமார் ரூ.40 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி கிராம மக்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
கமுதி யூனியன் பேரையூர் ஊராட்சியில் பேரையூர், மேட்டுப்பட்டியை சேர்ந்த கோட்டை, சாமிபட்டி, செங்கோட்டைப் பட்டி, சங்கரப்பன் பட்டி, கீழ வலசை, பேரையூர் காலனி ஆகிய ஊர்கள் அடங்கி உள்ளன.
கடந்த 2001-ம் ஆண்டில் இந்த ஊராட்சியில் மொத்தம் 6 ஆயிரத்து 27 பேர் இருந்தனர். ஆனால் அப்போதைய கணக்கெடுப்பின் போது பேரையூர் ஊராட்சியின் மக்கள் தொகை 2 ஆயிரத்து 551 என்று தவறாக அதிகாரிகள் பதிவு செய்து விட்டனராம்.
இதனால் இந்த ஊராட்சிக்குக் கிடைக்க வேண்டிய பல வசதிகள் கிடைக்காமல் போய்விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளில் பேரையூர் ஊராட்சிக்கு கிடைக்க வேண்டிய நிதியில் சுமார் ரூ.40 லட்சம் வரை தடைபட்டுள்ளதாம்.
போராட்ட அறிவிப்பு
மக்கள் தொகை கணக்கெடுப்பு குளறுபடியைக் கண்டித்தும், மீண்டும் சரியாக கணக்கெடுப்பு நடத்தி பதிவு செய்யக் கோரியும் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை முற்றுகை போராட்டம் மற்றும் பஸ் மறியல் நடத்தப் போவதாக ஊராட்சி தலைவர் சதர்ன் பிரபாகர் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து கமுதி தாசில்தார் ரெங்கன் தலைமையில் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி தலைவர் சதர்ன் பிரபாகரன், துணைத் தலைவர் பழனிச்சாமி, உறுப்பினர்கள் மோகன், ராஜேசுவரி, செல்வகுமார், பிச்சை, பெருமாள், பொன்னழகு, முனீசுவரி, சப்- இன்ஸ்பெக்டர் அதிர்ஷ்ட ராஜன் விரிவாக்க அதிகாரி செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேரையூர் ஊராட்சியில் தவறு இல்லாமல் மக்கள் தொகை கணக் கெடுப்பு நடத்த கலெக்டர், ஆர்.டி.ஓ. ஆகியோர் மூலம் நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் உறுதி அளித்தார். அதை தொடர்ந்து போராட்டத்தை ஒத்தி வைப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications