கலைஞர் வேலைவாய்ப்பு முகாம் - 5000 பேருக்கு வேலை: கனிமொழி
நாகர்கோவில்: முதல்வர் கருணாநிதியின் 85வது பிறந்தநாளையொட்டி நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம் கலைஞர் 85 நாகர்கோவிலில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. 5000 பேர் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று திமுக எம்.பியும், முதல்வர் கருணாநிதியின் மகளுமான கவிஞர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் கனிமொழி எம்பி நிருபர்களிடம் கூறியதாவது:
முதல்வர் கருணாநிதியின் 85வது பிறந்தநாளையொட்டி நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம் கலைஞர் 85 நாகர்கோவிலில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்காக 15 ஆயிரம் பேர் பதிவு செய்திருந்தனர். ஆனால் 16 ஆயிரத்து 11 பேர் நேர்காணலில் கலந்து கொண்டனர். இவர்களில் 64 சதவிகிதம் பேர் பெண்கள். இதில் 5 ஆயிரத்து 77 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பலர் தேர்வு பெறாததற்கு காரணம் தகவல் தொடர்பு திறமையின்மை, தன்னம்பிக்கையின்மை போன்ற காரணங்களை நிறுவனங்களின் பிரதிநிதிகள் கூறுகின்றனர். இன்னும் ஒரு சிலர் வெளியிடங்களுக்கு சென்று இரவு வேலை பார்ப்பதற்கு தயக்கம் காட்டியுள்ளனர். இது போன்றவர்களுக்கு மதுரையில் 15 நாட்கள் சிறப்பு பயிற்சி கொடுப்பதற்கு சில நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
தேர்வு பெற்றவர்கள் அந்த நிறுவனங்களுக்கு சென்றால் கண்டிப்பாக வேலை கிடைக்கும். மேலும் பரிசீலினையில் இருப்பவர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதுபோன்ற முகாம் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும். முதல் முயற்சியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் துவக்கப்பட்டுள்ளது.
முதல்வர் கருணாநிதி பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதால் இதுபோன்ற வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவரால்தான் இத்தனை நிறுவனங்கள் இங்கு துவக்கப்பட்டுள்ளன. இதனால் இன்னும் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஐடி பார்க் கொண்டு வருவதற்கு முதலமைச்சரிடம் நிச்சயம் பேசுவேன் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications