பிந்தாரவின் தங்க சாதனை-சென்னையில் உற்சாகம்
சென்னை: பிந்தராவின் வெற்றி சென்னையில் உற்சாகத்தை ஏற்படுத்தி கொண்டாட்டங்களுக்கு வழி வகுத்துள்ளது. எஸ்.எம்.எஸ். மூலம் பலரும் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
நாட்டின் பிற பகுதிகளைப் போலவே சென்னையிலும் பிந்த்ராவின் சாதனை மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டு வருகிறது.
பிந்த்ரா தங்கம் வென்ற செய்தி பரவியதும், பலரும் எஸ்.எம்.எஸ். மூலம் அதை தங்களது நண்பர்கள், உறவினர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.
இந்தியராக இருப்பதில் பெருமைப்படுகிறோம், ஜெய்ஹிந்த், பிந்த்ரா நம்மைப் பெருமைப்படுத்தி விட்டார் என்ற வாசகங்கள் எஸ்.எம்.எஸ்களில் அதிகம் அனுப்பப்பட்டன.
அலுவலகங்கள், பொது இடங்களில் பிந்த்ராவின் வெற்றிதான் இன்று டாக் ஆப் தி டவுன் ஆக இருந்தது.
பிந்த்ரா ஆரம்பித்து வைத்துள்ளார், அடுத்து சானியா மிர்ஸா, சாய்னா நெஹ்வால் உள்ளிட்டோர் பதக்க வேட்டையை தொடருவார்கள் என பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கனவு நனவானது-மில்கா சிங்:
பிந்த்ரா தங்கம் வென்றதன் மூலம் நாட்டுக்குப் பெருமை சேர்த்து விட்டார். எனது கனவும் நனவாகியுள்ளது என்று பறக்கும் சீக்கியர் என புகழப்படும் முன்னாள் ஒலிம்பிக் வீரர் மில்கா சிங் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இது மிகப் பெரிய சாதனை. இந்திய துப்பாக்கிச் சுடும் துறைக்கு மிகப் பெரிய சாதனை இது.
ஒலிம்பிக்கில் இந்திய வீரர் ஒருவர் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற கனவில் நான் இருந்தேன். அது தற்போது நிறைவேறியுள்ளது. பிந்த்ராவுக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் என்றார்.
தேசிய விடுமுறை வேண்டும்-பாஸ்கரன்:
1980 ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாகப் பணியாற்றிய வி.பாஸ்கரன் கூறுகையில், பிந்த்ரா நிகழ்த்தியுள்ளது சாதாரண விஷயம் அல்ல. மிகப் பெரிய சாதனை. இந்தியாவே பெருமை அடைந்துள்ளது.
இதைக் கொண்டாட நமது அரசு ஒரு நாள் தேசிய விடுமுறை விட வேண்டும்.
பிந்த்ராவிடமிருந்து கிளம்பியுள்ள இந்தப் பொறிதான் நமக்குத் தேவை. இது அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும் பரவ வேண்டும். அப்போதுதான் நமக்கு மேலும் பல பதக்கங்கள் கிடைக்கும்.
பிந்த்ராவின் வெற்றியை, சாதனையை அங்கீகரிக்கும் வகையில் தேசிய விடுமுறையை பிரதமர் அறிவிக்க வேண்டும்.அதுதான் பிந்த்ராவுக்கு நாம் செலுத்தும் சரியான பாராட்டாக இருக்க முடியும்.
இப்போது ரத்தோரிடமிருந்தும் நாம் ஒரு பதக்கத்தை எதிர்பார்க்கலாம். சாய்னா நெஹ்வாலும் பதக்கத்தை நோக்கி பயணித்து வருகிறார். அவர் மூலமும் நமக்கு பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
இதேபோல டென்னிஸிலும் நமக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவுக்கு பெருமையான தருணம் இது என்றர் பாஸ்கரன்.