டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் அனுமதி கோரி 100 வழக்குகள்
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மெயின் தேர்வில் தங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கோரி 100க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
டி.என்.பி.எஸ்.சி குரூப் 1க்கான மெயின் தேர்வு நடக்க இன்னும் ஐந்து நாட்களே உள்ளன. இந்த நிலையில் தேர்வில் தங்களை அனுமதிக்கக் கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஜூலை 31ம் தேதி 31 பேர் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்தனர்.
31 பேரும் தங்களது மனுவில், நாங்கள் 2007ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி நடந்த தொடக்க நிலைத்தேர்வை எழுதி பாஸ் செய்துள்ளோம். ஆனால் எங்களுக்கு வந்த மதிப்பெண்கள் நாங்கள் எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்தது.
இதற்குக் காரணம் தேர்வில் பல தவறான கேள்விகள் இடம் பெற்றிருந்ததே. மேலும் பதில்களும் கூட தவறானவையாக இருந்தன. எனவேதான் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற முடியாமல் போய் விட்டது. எனவே எங்களை மெயின் தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
அதை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த 31 பேரையும் மெயின் தேர்வை எழுத அனுமதிக்க வேண்டும் என் டி.என்.பி.எஸ்.சிக்கு உத்தரவிட்டது.
மேலும், அனைத்து தவறான கேள்விளையும்,அதற்கான பதில்களையும் ஆகஸ்ட் 7ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், டி.என்.பி.எஸ்.சி நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் இதே கோரிக்கையுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் தற்போது உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். இதுகுறித்து மனுதாரர் ஒருவர் கூறுகையில், 7 ஆண்டுகள் கழித்து இந்த தேர்வு நடைபெறுகிறது. எங்களில் பலருக்கு அடுத்த தேர்வை எழுத போதிய வயது இருக்காது. எனவேதான் எங்களையும் ேதர்வை எழுத அனுமதிக்க வேண்டும் என கோரி வழக்கு தொடர்ந்துள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications